ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்ள கிறிஸ்துவர்கள் நிதி உதவி பெற, வரும் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மாநில அளவில் கிறிஸ்தவர்கள் பெத்லஹேம், ஜெருசலம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மத புனித தலங்களுக்கு, வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதுபோன்று செல்வோருக்கு அரசு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் நிதி உதவி அளித்து வருகிறது.
ஏற்கெனவே இதற்காக விண்ணபிக்க கடந்த 16 -ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலகெடு டிச.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்புவோர் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம், எண் 807(5ஆவது தளம்), அண்ணாசாலை, சென்னை என்ற முகவரிக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.