எம்ஜிஆரின் அரசியல் வரலாறு...

திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான்
எம்ஜிஆரின் அரசியல் வரலாறு...

அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள். 

ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

  • 1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
  • 1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
  • 1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
  • 1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
  • 1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
  • 1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
  • 1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • 1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
  • 1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
  • 1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
  • 1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
  • 1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக) 
  • 1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
  • 1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
  • 1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  • 1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
  • 1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.

எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்

  • எம்.ஜி.ஆர். பரங்கிமலை                   -54106.       காங்கிரஸ்    -26,432
  • எம்.ஜி.ஆர்.  பரங்கிமலை                 -65405         காங்கிரஸ்    -40777
  • எம்.ஜி.ஆர்.  அருப்புக்கோட்டை     -43065          தி.மு.க.         -5415
  • எம்.ஜி.ஆர்.  மதுரை மேற்கு            -57019          தி.மு.க.         -35959    
  • எம்.ஜி.ஆர்.  ஆண்டிப்பட்டி              -60510          தி.மு.க.          -28016

24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com