வளமான வாழ்வைத் தரும் ஆடிப் பெருக்கு...!

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரிதான். ஆனால், ஆடி 18-ம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவானது பெரும்பாலும் எல்லா நதி தீரங்களிலும் கொண்டாடப்படுகிறது.
வளமான வாழ்வைத் தரும் ஆடிப் பெருக்கு...!

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரிதான். ஆனால், ஆடி 18-ம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவானது பெரும்பாலும் எல்லா நதி தீரங்களிலும் கொண்டாடப்படுகிறது.

அரைத்த மஞ்சளை ஒரு செம்பு நீரில் கலந்து, அதை ஆற்று நீரில் கரைத்து, செம்பில் ஆற்று நீர் எடுத்து வந்து விளக்கு பூஜை செய்வர். மேலும், ஆற்றின் படித்துறையில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ச்சியோடு திரும்புவர்.

ஆடி மாதம் காவிரியில் நிறைந்து வரும் புதுவெள்ளம் புத்துணர்ச்சி தரும். சம்பா சாகுபடி முடிந்து அறுவடையான பின் வயல்களெல்லாம் உழப்பட்டு புதுத் தண்ணீரின் வரவுக்காகக் காத்திருக்கும்.  குறுவை சாகுபடிக்கு நாற்று நடவுப் பணிகள் தொடங்கும் நிலையில் ஆடி 18-ம் பெருக்கு திருநாள் ஆன்மிக விழாவாகக் களை கட்டுகிறது. காவிரி அன்னைக்குப் பூஜை செய்து, புதுத் தாலி முடிதல் இந்த விழாவின் முக்கிய அம்சம்.

ஆடிப்பெருக்கு விழா யோகிகளும், சித்த புருஷர்களும் காவிரியில் நீராடி, தங்கள் தவத்தின் பலனை மக்களுக்குப் பகிர்ந்தளித்து செல்வதாக ஐதீகம். எனவே காவிரியில் நீராடி தாமரை இலையில் விளக்கேற்றி நீரில்மிதக்க விடுவதுடன், தான தர்மங்களையும் செய்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம். ஆடிப்பெருக்கன்று காவிரி அன்னையின் கதையை படிப்பதும் சிறப்பு தான். காவிரியைத் தந்த உச்சிப் பிள்ளையாரையும் அன்றைய தினம் சிறப்பாக வழிபடுவர்.

வெட்டாறு, குடமுருட்டி, வெண்ணாறு, கல்லணை, அரசலாறு ஆகியவற்றில் நீர் மிகுதியாகத் திறந்து விடப்படும்.

ஆடிப்பெருக்கு பூஜையை காவிரி கரையில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைச் சிறிதளவு போடவும். நிறைகுடத்தில் இருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்ததும் மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்கவும். தண்ணீரில் உதிரிப்பூக்களைப் போடவும்.

கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி, கங்கை, யமுனை, நர்மதை, காவிரி வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்துக் கொள்ளவும். செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விடலாம். சர்க்கரைப் பொங்கல் வைத்து காவிரி அன்னைக்குப் படைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். காவிரி தாயின் பூரண ஆசிகள் பெற்று, செல்வச் செழிப்புடன் வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com