முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழும் பழனி மலைக் கோயிலில் பக்தர்களுக்காக இயக்கப்பட்டு வரும் இரண்டாம் எண் விஞ்ச் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
பழனி மலைக் கோயிலில் 3 வழிகளில் இயங்கும் இந்த விஞ்ச் பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாம் எண் விஞ்ச் கடந்த ஜூன் 12-ம் தேதி பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டு, 21-ம் தேதி விஞ்ச் பெட்டிகள் கரூருக்கு கொண்டு செல்லப்பட்டு சீரமைக்கப்பட்டன.
தொடர்ந்து ரயில்வே பணியாளர்களைக் கொண்டு, விஞ்ச் செல்லும் தண்டவாளத்தில் இருந்த மரக்கட்டைகளினாலான ஸ்லீப்பர்கள் அகற்றப்பட்டு கான்கிரீட் ஸ்லீப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்னர் புதிய விஞ்ச் பெட்டிகள் வந்த பின் புதிய தண்டவாளத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. சுமார் ரூ.10 லட்சம் செலவில் நடைபெற்ற இப்பணிகள் திருப்திகரமாக இருந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை புதிய விஞ்ச் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவற்றுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா, முன்னாள் செயற்பொறியாளர் நாச்சிமுத்து, கண்காணிப்பாளர் ராஜூ, உதவிப் பொறியாளர்கள் குமார், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.