ஆடி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர்,
ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகம். எனவே, மாதம்தோறும் பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
ஆடி மாத பௌர்ணமியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.31 மணி முதல் திங்கள்கிழமை இரவு 12.02 மணி வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
எனினும், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். மாலை 6 மணிக்குப் பிறகு பக்தர்களின் வருகை அதிகரித்தது. தொடர்ந்து, விடிய விடிய திங்கள்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில்களிலும், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளிலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் நலன் கருதி தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.