நம் வாழ்வில் முக்கியமான ஒன்றான சிரிப்புக்கும் ஜோதிடத்துக்கும் தொடர்பு இருக்குமா? அப்படி இருக்குமேயானால், எந்த கிரகம் சிரிப்புக்குக் காரணமாக இருக்கும் என ஆராய்ந்தால், ஜோதிடத்துக்கும் சிரிப்புக்கும் மிக முக்கியத் தொடர்பு இருப்பது தெரிந்தது. ஜோதிடத்தின் காரகரும் சிரிப்பின் காரகருமாக திகழும் புத பகவான் தான்.
சிரிப்பை அடுத்தவருக்குத் தெரிவிப்பவை நமது வாயும் முகமும்தான். ஒருவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், தாமாகவே முகத்தில் ஒரு மலர்ச்சியும் புன்முறுவலும் தோன்றுவது இயல்பு. முகமலர்ச்சி மற்றும் சிரிப்பை தெரிவிக்கும் பாவம் காலபுருஷனுக்கு இரண்டாம் பாவமான மற்றும் சுக்கிரனின் வீடான ரிஷபம் ஆகும்.
ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு தோன்றுவது என்பது மூளையில் ஏற்படும் ஒரு மாற்றமாகும். மூளை மற்றும் சிந்திக்கும் திறனின் காரகர் புத பகவானும் அவருடைய வீடான மிதுன ராசியும் ஆகும். மேலும், மிதுனம் காற்று ராசி என்பதால், ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு ஏற்பட்டால் அது மற்றவர்களையும் உடனே சென்று தொற்றிக்கொள்கிறது.
ஒருவருக்கு ஹாஸ்ய உணர்வு தோன்றவும் அதை அனுபவிக்கவும், மனது நல்ல நிலையில் இருக்க வேண்டும். மனது சரியில்லாத நிலையில் எத்தனைதான் நகைச்சுவை உணர்வோடு பேசினாலும் எடுபடாது. சந்திரனை மனோகாரகன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்கிறது வேதத்தின் அங்கமான புருஷ சூக்தம்.
புதன், சுக்கிரன், சந்திரன் இவர்களுடைய சுப தொடர்புகள், ஒருவரை எப்போதும் மகிழ்ச்சியாகவும் நகைச்சுவை உணர்வோடும் வைத்திருக்கும்.
நகைச்சுவை உணர்வு யாருக்கு அதிகம்?
மேற்கண்ட தொடர்புகள் இருந்து அவற்றோடு 6/8/12 தொடர்புகள் இருந்தாலோ அல்லது பாதகாதிபதிகள், திதி சூன்ய ராசி அதிபதிகள் தொடர்பு பெற்றுவிட்டால், அவர்கள் “சிலர் அழுவார், சிலர் சிரிப்பார், நான் அழுதுக்கொண்டே சிரிக்கின்றேன்” என உள்ளுக்குள் அழுது அடுத்தவரை சிரிக்கவைத்துக் கொண்டிருப்பார்.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்