ஜோதிடக் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழர்களே...!

மேலை நாடுகளில் ஜோதிடம் வளர்ந்த வரலாற்றை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.
ஜோதிடக் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழர்களே...!

மேலை நாடுகளில் ஜோதிடம் வளர்ந்த வரலாற்றை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், மேலை நாடுகளில் ஜோதிடம் தோன்றுவதற்கு முன்னரே, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஜோதிடக் கலை தோன்றிவிட்டது. இந்தியாவின் முதன்மை நாகரிகம் சிந்துச் சமவெளி நாகரிகம். மேலை நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவுக்குள் வந்து சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்கள்தான் ஆரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களே சிந்துச் சமவெளி நாகரிகத்தை தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களின் வருகைக்கு பின்னரே இந்தியாவில் வானவியல், கணிதம் ஆகிய துறைகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், ஆரியர்களின் வருகைக்கு முன்னரே சிந்துச் சமவெளியில் தமிழர்கள் வாழ்ந்ததாகவும், மிகத் தொன்மையான காலத்திலேயே அவர்கள் ஜோதிடத்தைப் பற்றிய அறிவும், ஞானமும் பெற்றிருந்தனர் என்றும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதை அடிப்படையாக வைத்து, இந்தியாவிலும், தமிழகத்திலும் ஜோதிடக் கலையின் வளர்ச்சியை இரு காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கவேண்டி உள்ளது. அது,

  1. ஆரியர்களின் வருகைக்கு முந்தைய காலம்

  2. ஆரியர்களின் வருகைக்கு பிந்தைய காலம்

ஆரியர்களின் வருகைக்கு முந்தைய காலம்

சிந்துச் சமவெளி நாகரிகத்தை ஆரியர்களின் நாகரிகம் என்றே பலகாலமாக ஆரிய ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகளிலும்கூட இதையே போதித்து வருகின்றனர். இந்தியச் சரித்திரத்திலும் அது அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களில் கிடைத்த தொல்பொருள் சான்றுகளை மறு ஆய்வு செய்த உலக அறிஞர்கள், சிந்துச் சமவெளி நாகரிகத்தை இந்தியப் பூர்விகக் குடிகளான திராவிடர்களின் (தமிழர்கள்) நாகரிகம் என்று நிரூபித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், சிந்துச் சமவெளி நாகரிகத்தின் காலம் கி.மு.4500-க்கும் கி.மு. 2000-க்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் எனவும், ஆரியர்களின் வருகைக்கு சற்று முன்னதாக, அதாவது கி.மு.2000-க்கும் கி.மு.1500-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தத் திராவிட சிந்துச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்திருக்கலாம் எனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும், தென்னிந்தியாவில் தாமிரபரணி நதிப்படுகையில் நடந்த தொல்பொருள் ஆய்வுகளில், பல முதுமக்கள் தாழிகள், ஆயுதங்கள், அணிகலன்கள், மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள், இவற்றின் காலம் சுமாராக கி.மு. 18000-ஆக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆக, மிக மிகத் தொன்மையான காலத்திலேயே தென்னாட்டில் திராவிட நாகரிகம் வேரூன்றி இருந்துள்ளது. கி.மு.18000 என்பது எகிப்திய, மெசபடோமிய, சீன நாகரிகங்களுக்கெல்லாம் மிகவும் முற்பட்ட காலம் என்பதை நினைவில் கொண்டால், உலகின் மூத்த நாகரிகம் நமது திராவிட நாகரிகமே என்பது புலனாகும். பிற்காலங்களில், தென்னிந்தியாவில் இருந்துதான் வடஇந்தியப் பகுதிக்குச் சென்று சிந்துச் சமவெளிப் பகுதியில் புதிய குடியேற்றப் பகுதிகளை திராவிடர்கள் அமைத்துக்கொண்டனர்.

ஆரியர்கள், இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே, (தென்)மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய மன்னர்கள் சீரும் சிறப்புமாக தென்னிந்தியாவை ஆண்டு வந்திருக்கின்றனர். முதல் தமிழ்ச் சங்கம், இடை தமிழ்ச் சங்கம் ஆகியவை (தென்)மதுரையில்தான் அமைந்திருந்தது. குமரிக் கண்டம் என்ற பரந்து விரிந்த நாடு, பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் தென்னிந்தியாவில் இருந்திருக்கிறது. ஆழிப் பேரலைகளாலும், பெரு ஊழியாலும் இந்தக் குமரிக் கண்டமும் தலைநகரமான தென்மதுரையும் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அதன்பின்னரே, வடமதுரையை (தற்போதுள்ள மதுரை) தலைநகரமாகக் கொண்டு பாண்டியர்களின் ஆட்சி தொடர்ந்தது.

முதல், இடை தமிழ்ச் சங்க கால நூல்களும், தொன்மையான திராவிட நாகரிகத்துக்கான சான்றுகளும், குமரிக் கண்டத்தோடு கடலுக்குள் மூழ்கிப் போயின. எனவே, இந்தத் தொன்மையான நாகரிகம் குறித்த வலுவான சரித்திர ஆதாரங்கள் நம்மிடம் அதிகம் இல்லை. கடைச் சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திக் குறிப்புகளில் இருந்தே தொன்மையான தமிழ்நாட்டு நாகரிகம் குறித்த பல செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவை வாய்வழிச் செய்திகளே தவிர, உறுதியான சரித்திர ஆதாரங்கள் அல்ல.

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே, பாண்டிய மன்னர்கள் பெரும் கடற்படையோடு படையெடுத்துச் சென்று இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பர்மா, லட்சத் தீவுகள் ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தனர். கி.மு.15-ம் நூற்றாண்டிலேயே தென்னாட்டுத் துறைமுகங்களில் இருந்து கிரேக்க, ரோமானிய நாடுகளுக்கு வாசனைப் பொருட்களும், பாண்டிய முத்துகளும் ஏற்றுமதியாகி இருக்கின்றன.

வடஇந்தியாவில் இருந்த திராவிடர்களின் மரக் கலங்களில் வியாபாரப் பொருட்கள் ஏற்றப்பட்டு, சிந்து நதி வழியே கடலை அடைந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ரிக் வேத பாடல்களில் குறிப்புகள் உள்ளன. ரிக் வேதத்தின் காலம் கி.மு.1500–1000 வரையிலான காலகட்டம் என்பது உண்மையானால், கி.மு.1500-க்கு முன்பே திராவிடர்களுக்கும் கிரேக்க நாட்டுக்கும் இடையே வியாபாரத் தொடர்புகள் இருந்தது என்பது நிரூபணமாகிறது.

இரு நாடுகளுக்கு இடையே வியாபாரத் தொடர்புகள் இருக்கும்போது, அது வெறும் வணிகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. கலாசாரப் பரிமாற்றங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் இயல்பாகவே நிகழ்ந்துள்ளன. எனவே, கிரேக்க நாட்டு விஞ்ஞான, ஜோதிடக் கருத்துகளை நிச்சயம் திராவிடர்கள் அறிந்திருக்க வேண்டும். அதுபோன்றே, நம் நாட்டு தொன்மையான ஞானங்களும் கிரேக்க நாட்டில் பரவியிருக்க வேண்டும்.

இந்தத் தொன்மையான சரித்திரத்துக்கும் ஜோதிடக் கலை மற்றும் வானவியலுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதல்லவா? நிச்சயம் சம்பந்தம் உண்டு.

மிகத் தொன்மையான காலத்தில், உலகில் மிகச் சிறந்த மாலுமிகளாக இரண்டு இன மக்களே இருந்திருக்கின்றனர். முதலாவதாக தமிழர்கள் (திராவிடர்கள்), இரண்டாவதாக கிரேக்க நாட்டுக்கு அருகில் ஒரு பெரிய தீவில் வசித்து வந்த மினோவன்கள். திராவிடர்கள் மிகத் தொன்மையான காலத்திலேயே திரைகடல் ஓடி திரவியம் தேடியிருக்கிறார்கள். திராவிடமானது, கடற்படையுடன் கடல்கடந்து போருக்குச் சென்று பல நாடுகளை வென்றிருக்கிறது.

திசை காட்டும் கருவிகளோ, வரைபடங்களோ எதுவும் இல்லாத காலத்தில், திராவிடர்கள் எவ்வாறு கடற்பயணத்தை மேற்கோண்டிருப்பார்கள்? பகலில் சூரியனை அடிப்படையாக வைத்தும், இரவில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் இருப்பைக் கணக்கிட்டுமே அவர்கள் திசைகளையும் நேரத்தையும், இருக்கும் இடம், செல்ல வேண்டிய இடம் ஆகியவற்றையும் கணித்திருக்க முடியும். திராவிட சிந்துச் சமவெளி மக்களிடையே ஒரு சந்திர காலண்டர் வழக்கில் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் (கிரகங்கள்) ஆகியவை குறித்த வலுவான அறிவும், ஞானமும் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கும். ஆக, ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்திலேயே திராவிடர்களிடையே வானவியல், ஜோதிடம் குறித்த ஞானம் இருந்திருக்கிறது என்பது நிரூபணமாகிறது. இது எவ்வாறு சாத்தியம்? ஆரியர்களின் வருகைக்கு முன்னரே தமிழக நாகரிகம் ஜோதிடத்தை கற்றிருந்ததா? ஆம்.

தமிழ் நூல்களின் பொருள்களைக் கேட்டு அறியும் பொருட்டு, திருச்செந்தூருக்கு அடிக்கடி வந்தவர் அகத்திய மாமுனிகள். அப்படி வந்த சமயத்தில் ஒருநாள், சகல லோக சம்பிரதாயங்களையும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவருடைய மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. உடனே, குரு சன்னிதானத்துக்கு வந்து ஜோதிட நூலை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டினார். முருகனும் அதை ஏற்று ஜோதிட சாஸ்திரத்தை உரைக்க, அகத்திய மாமுனிகள் எழுதியதே ’குமாரசுவாமியம்’ எனும் நூலாகும்.

அகத்தியர், முருகன் உரைத்து தான் கற்றுணர்ந்த ஜோதிட சாஸ்திரத்தை பதினென் சித்தர்களுக்கும் வழங்க, அவர்கள் தம்தமது அறிவுக்கு எட்டிய வரை கற்று இயற்றிய நூல்களும், பிற்காலத்தில் அவர்கள் வழி வந்தவர்கள் இயற்றிய நூல்களும் ஏராளம்.

குறிப்பு

பிற்காலத்தில் வந்த வராகமிஹிரர் இயற்றிய சம்ஸ்கிருத நூல்கள், அகத்தியர் வாயிலாகக் கற்றுணர்ந்த பதினெட்டு சித்தர்களின் நூல்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டவையே. இதன் அடிப்படையில், உலகத்தில் உள்ள ஜோதிட நூல்கள் அனைத்துக்கும் குமாரசுவாமியமே மூலநூலாக இருக்கலாம் என்று கருத இடம் உள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்பொழுது, தமிழர்கள் மூலமே ஜோதிடம் உலகுக்கு அளிக்கப்பட்டுள்ளதோ என்ற வியப்பும் எழுகிறது. எனவே, ஒவ்வொரு தமிழ் மகனும் பெருமைமிக்க இக்கலையைக் கற்றுணர்வது, வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்ற உறுதுணையாக இருக்கும்.

குமாரசுவாமியத்தில் உள்ள காப்பு பாடலிலேயே ஜோதிடத்தின் வலிமை கூறப்படுகிறது. அதில் வரும் ஒரு பாடலின் விளக்கமானது, செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்ம தேவனும், உருத்திரமூர்த்தியும், மகா விஷ்ணுவும், மகேஸ்வரனும், சதாசிவனும் இந்தப் பூமியில் வந்து பிறப்பார்களாயின், அவர்களுடைய எதிர்காலத்தையும் குமாரசுவாமியத்தில் உள்ள குறிப்புப்படி உள்ளதை உள்ளவாரே கூறமுடியும் என்பதே.

ஜோதிடத்தை அருளிய முருகன், “இருதிணை உயிர்களுக்கும் இவை அல்லாத மற்றவற்றுக்கும் பலன் உரைக்குமாறு நூல் ஒன்று செய்து வந்துள்ளேன்” என்று சிவபெருமானிடம் பணிந்து நிற்க, சிவபெருமானும் அதை வைத்து தனக்கு ஒரு பலன் உரைக்குமாறு கேட்டுக்கொண்டார். முருகனும், அப்போது இருந்த கிரக நிலைகளையும் உற்றுநோக்கி, பின்வருமாறு பலன் உரைக்கிறார் - “கற்பனை கடந்த பாதா பழியெடுத்துழல்வாய்”. குமாரசுவாமியத்தின் சிறப்பு பாயிரம் இப்படித்தான் சொல்கிறது. இதன் விளக்கம் என்ன?

ஒருமுறை, சிவனைக் காணவந்த பார்வதி, சிவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலை இருந்ததால், அவரை சிவன் என நினைத்து அவர் அருகில் உட்கார, சினம் கொண்ட சிவன், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். இதனால் பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டு, கையில் பிரம்மாவின் தலையுடன் பிட்சாடனராகச் சுற்றித் திரிந்தார்.

இதுவே, “கற்பனை கடந்த பாதா பழியெடுத்துழல்வாய்” என்று சிவனுக்கு முருகன் உரைத்த பலனாக இருந்திருக்கக்கூடும். அதனால்தான், அப்பன் சிவனுக்கே ஜோதிடப் பலன் சொன்னவர் முருகப் பெருமான் என அனைவராலும் போற்றப்படுகிறார். அந்த அளவுக்குக் குமாரசுவாமியத்தில் உள்ள ஸ்லோகங்கள், ஒவ்வொரு தனிமனிதனின் எதிர்காலத்தை உண்மையாகவும், துல்லியமாகவும் பிரதிபலிக்கின்றன.

இந்நூலைக் கற்று, பதினென் சித்தர்கள் இயற்றிய நூல்களின் வழியாகவே தமிழ் மக்கள் மிகத் தொன்மையான காலத்தில் ஜோதிடத்தைப் பற்றிய அறிவையும், ஞானத்தையும் பெற்றிருக்க முடியும். தமிழர்களின் மூலமே மேலைநாட்டு மக்களிடமும் ஜோதிடம் பற்றிய அறிவு பரவியிருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆரியர்களின் வருகைக்கு பிற்பட்ட காலம்

வானவியலின் கோட்பாடுகளையே சித்தாந்தம் என்கிறோம். அந்த சித்தாத்தம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை -

  1. பிரும்ம சித்தாந்தம்

  2. ரோமஸ சித்தாந்தம்

  3. சூரிய சித்தாந்தம்

  4. வாசிஷ்ட சித்தாந்தம்

  5. பௌலஸ சித்தாந்தம்

பதினென் சித்தர்கள், ஜோதிட நூல்களைத் தொடர்ந்து மேற்கூறிய சித்தாந்தங்களையும் இயற்றியுள்ளனர். இவற்றுள், சூரிய சித்தாந்தமே மிகவும் துல்லியமானதாகக் கருதப்படுகிறது.

இதன்படி, நாகரிக காலங்களில் இருந்து சித்தாந்த காலம் என்பது தோராயமாக கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் கி.பி.12-ம் நூற்றாண்டு வரையிலான காலமாக இருக்கலாம். கி.பி.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியபட்டர், இந்திய வானவியலின் தந்தை என அழைக்கப்படுபவர். இந்தியாவில் வானவியல், ஜோதிடம், கணிதம் என மூன்று துறைகளிலும் மிகப்பெரும் வளர்ச்சியை உருவாக்கியவர். சூரியனைப் பற்றியும் அதைச் சுற்றி உள்ள கோள்களின் இயக்கத்தைப் பற்றியும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர். காலம் என்பது நான்கு யுகங்களாகப் பிரித்துக் கூறப்பட்டது.

ஒவ்வொரு யுகங்களின் கால அளவுகளைக் கணித்துக் கூறியவர் ஆரியபட்டர். ஆரியபட்டருக்கு முற்பட்ட காலத்தில், யுகங்களைப் பற்றி கூறப்பட்டுள்ள கணிதங்களுடன் ஆரியபட்டரின் கணிதத்தை ஒப்பிடுகையில் அவை சரியானதே என்ற முடிவுக்கு வரமுடியும். அதன்படி,

• கிரேதாயுகம் = 17,28,000 வருடங்கள்

• திரேதாயுகம் = 12,96,000 வருடங்கள்

• துவாபரயுகம் = 8,64,000 வருடங்கள்

• கலியுகம் = 4,32,000 வருடங்கள்

ஒவ்வொரு யுகங்களின் காலஅளவுகளும், மனித சுவாச எண்ணிக்கையின் மடங்குகளாக அமைந்துள்ளது.

அனைத்து யுகங்களின் கூட்டுத்தொகை 43,20,000 வருடங்கள். இது, மனித சுவாசத்தின் எண்ணிக்கையில் 200 மடங்கு. இதையே ஒரு சதுயுகம் என்று குறிப்பிடுகிறோம்.

71 சதுயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்தரம் என்கிறோம். அதன்படி,

1 மன்வந்தரம் = 71 X 43,20,000 = 30,67,20,000 வருடங்கள்

14 மன்வந்தரங்களை உள்ளடக்கியது ஒரு கல்பம் ஆகும். அதன்படி,

1 கல்பம் = 4,29,40,80,000 வருடங்கள்.

பிரம்மாவுக்கு ஒரு கல்பம் என்பது அரை நாள். இதன்மூலம், தற்போது பிரம்மாவின் வயது தோராயமாக ஐம்பது வருடங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. இதன் அடிப்படையில் ஆராய்ந்தால், கலியுகம் தோன்றி 5119 வருடங்கள் ஆகிறது. இது, உலகம் தோன்றி எண்ணற்ற கோடி கலியுகங்கள் கடந்துவந்த ஒரு சதியுகத்தில் உள்ள கலியுகத்தின் காலம் என்பதை மனத்தில் கொள்ளவும். இந்தக் கலியுகம் முடியவே இன்னும் எத்தனை லட்சம் வருடங்கள் உள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஆரியபட்டருக்குப் பிறகு கணிதம், ஜோதிடம், வானவியல் ஆகிய மூன்று துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியவர் வராகமிஹிராச்சாரியார். இவர் இந்திய ஜோதிடவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரது காலம் கி.பி.6-ம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது. பதினென் சித்தர்கள் கற்று இயற்றிய நூல்களை நன்கு ஆராய்ந்து, தனது கருத்துகளையும் சேர்த்து ஜோதிடத்தின் அங்கங்களைக் கணித ஸ்கந்தம், ஹோரா ஸ்கந்தம், சாகா ஸ்கந்தம் என மூன்று ஸ்கந்தங்களாக சம்ஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். இவ்வாறாக ஜோதிடக் கலை, நாகரிகக் காலங்களில் இருந்து காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியையும், மக்களுக்குப் பயன்பாட்டையும் அளித்து காலங்களைக் கடந்து வந்துள்ளது.

ஜோதிடக் கலையின் முழுமையான பயன்பாட்டை உணர்ந்ததால்தான், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அரசவையில் ஜோதிடர்களுக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவர்களின் வாக்கை வேதவாக்காக ஏற்று, மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொதுநோக்கில் ஆட்சி செய்தனர்.

ஆனால் இன்றைய நிலையில், ஜோதிடத்தின் பயன்பாடு என்பது, காரணம் தெரியாது பின்பற்றும் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களே தீர்வு என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் முழு பயன்பாட்டையும் நம்மால் பெற முடியவில்லை. பிரச்னைகளில் இருந்து விடுபட நாம் மேற்கொள்ளும் பரிகாரங்கள் எந்த அளவு சரியான பலனைக் கொடுக்கிறது; பரிகாரங்கள் மட்டுமே வாழ்க்கையில் தேவையானதைப் பெற போதுமானதாக இருக்குமா? இது பற்றிய விவரங்களைப் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்)

  • வாழ்வியல் வழிகாட்டி ராஜேஸ் கன்னா (தொடர்புக்கு – +91-9443436695; rajeshkanna.astro@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com