நவக்கிரகங்களில் கர்ம கிரகம் - தொழில் கிரகம் வாழ்வில் அனைத்து விதமான நல்ல விஷயங்களையும் அளிப்பவர் - சூரியனின் மகன் மந்தன் என்றும் சனி பகவான் என்றும் அழைக்கப்படுகிறார்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ம் தேதியான (19.12.17) நாளை காலை 9.59-க்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.
சனிபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்த இராசிக்கு எந்த விதமான தாக்கங்களை தரப்போகிறார் என்றும், சனி பகவானின் பிடியிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய
பரிகாரங்களை பற்றிப் பார்ப்போம்.
ராசிகளும் சனிபகவானின் தாக்கங்களும்!
மேஷம் - அஷ்டம சனி முடிவடைகிறது
ரிஷபம் - அஷ்டம சனி ஆரம்பம்
மிதுனம் - கண்டக சனி
கடகம் - சனியின் பாதிப்பு இல்லை
சிம்மம் - அர்த்தாஷ்டம சனி முடிவு
கன்னி - அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்
துலாம் - ஏழரை சனி முடிவு
விருச்சிகம் - பாத சனி
தனுசு - ஜென்ம சனி
மகரம் - விரய சனி
கும்பம் - சனியின் பாதிப்பு இல்லை
மீனம் - சனியின் பாதிப்பு இல்லை
சனியின் பிடியிலிருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
• தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு, காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக்கூடிய சக்தி சனிபகவானிற்கு உண்டு.
• வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும் ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
• திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
• காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினைகளின் வீரியம் குறையும்.
• கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமைத்தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.
• பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனையின் வீரியம் குறையும்.
• காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். ஆகவே, காக்கையை வழிபடுங்கள்.
• அதனால், காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும், சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும், சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.
• காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தக் காரியம் வெற்றிபெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்ல பலன் உண்டு.
• வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால், அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே, காக்கையை வழிபாடு செய்வதால் சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தினைப் பெற்று மனமகிழ்வுடன் வாழலாம்.