சிவ லிங்கத்திற்கு விதவிதமான அபிஷேகங்களும், அலங்காரமும் செய்வதுண்டு. ஆனால் நாம் செய்யும் அபிஷேகம் அப்படியே உறைந்த நிலையில் கிடக்கும் அதிசயம் கேள்விப்பட்டதுண்டா. இந்தத் தலத்தில் தான் அந்த அதிசயத்தைக் காண முடிகின்றது.
அப்படியொரு அதிசய கோயில் எங்கு உள்ளது என்று அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டாமா? வாருங்கள் பார்ப்போம்.
கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ளது வடக்கும்நாதர் சிவன் கோயில். பிரமிக்க வைக்கும் இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாகச் சிவலிங்கத்திற்கு செய்து வரும் நெய் அபிஷேகம் அப்படியே உறைந்து சிவ லிங்கத்தையே மூடி விட்டதாம். உறைந்த இந்த நெய்யின் உயரம் சுமார் 4 அடிகளாக உள்ளதாம்.
இந்த மூடிய நெய் லிங்கத்தைச் சுற்றி லட்சக்கணக்கான விளக்குகள் வைத்தாலும் நெய் சூட்டில் உருகுவதே இல்லையாம். சரி, வெயில் காலத்திலாவது உருகுமா என்றால் அதுவும் இல்லை என்னே ஒரு அதிசயம். இன்றும் இந்த ஆலயத்தில் தொடர்ந்து அய்யனுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்று வருகிறதாம்.
உறைந்த நெய்யின் சிறு துளி கிடைத்தாலும் அமிர்தம் தான். இதைப் பக்தர்கள் பிரசாதமாக வாங்கி உண்டால் உடலில் எந்தவித நோயாக இருந்தாலும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.