ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள், அவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.
குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடமோ, மற்றவரிடமோ வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள். அந்தக் கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக நாட்டம் இருக்கும். தமிழில் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடுமையான வார்த்தைகளால் பேசிவிட்டால், இவர்கள் அதை மனதில் வைத்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு கொண்டு விடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையூறு ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்குச் சென்று விடுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களைப் பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் நண்டைப் போல செயல்படுவார்கள். இவர்களிடம் பேசும்முன் யோசித்துப் பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்னையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். நண்டு எப்படி தனக்கு ஆபத்து வருவதை அறிந்து முன்னெச்சரிக்கையாக ஒளிந்து கொள்கிறதோ, அதே போல் இவர்களும் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களின் புகழையேப் பாடி நிறைய பணம் சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் முழு தீவிரமாக இறங்கி விட்டால், இவர்கள் வெற்றி பெறுவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. அதேநேரம் சோம்பேறியாக பணம் வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டால், இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள்.