திருமலையில் திவ்ய தரிசனத்துக்கான டோக்கன் இனி 7 நாட்களும் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், விரைவாக ஏழுமலையானைத் தரிசிக்க திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் முறையை சில ஆண்களுக்கு முன் தேவஸ்தானம் துவக்கியது.
ஆனால், பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியதால் வார இறுதி நாட்களில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதை, இரண்டு வாரங்களுக்கு முன் தேவஸ்தானம் ரத்து செய்தது. வார நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை மட்டும் 20 ஆயிரம் (அலிபிரியில் 16 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டில் 4 ஆயிரம்) திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இதனால், பாதயாத்திரை வந்த பக்தர்கள் இரண்டரை மணி நேரத்திற்குள், ஏழுமலையானைத் தரிசித்து வெளியேறுகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போதும் பக்தர்கள் எந்தவித காத்திருப்பும் இன்றி தரிசனம் செய்து வெளியேற முடிகிறது.
எனவே, இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் 20 ஆயிரம் பேருக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.