முழுமையான வாழ்வியல் வெற்றி அனைவருக்கும் சாத்தியமா! ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

முழுமையான வாழ்வியல் வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.
முழுமையான வாழ்வியல் வெற்றி அனைவருக்கும் சாத்தியமா! ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

முழுமையான வாழ்வியல் வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ப்ரச்னம், கணிதம், கோளம், நிமித்தம், முகூர்த்தம் என ஐந்து பகுதிகளுடன் ஜாதகத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் அந்தச் சாத்தியத்துக்கு மேலும் வலு கூடும் என்பதுதான் ஜோதிட சாஸ்திரம் தரக்கூடிய உறுதிப்பாடு.

அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தின் அந்த அடிப்படை ஆறு பிரிவுகளைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்பதுடன், அவசியமானதும்கூட. அவற்றைப் பற்றி இனி வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம்.

ஜோதிட அறிவியலின் அடிப்படைக் கூறுகள்

ஜோதிட சாஸ்திரம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கணிதத்தை அடிப்படையாகக்கொண்ட கணிதம் - கோளம் சேர்ந்தது ஒரு கூறு. முன்கர்மவினையின் வெளிப்பாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஜாதகம் - ப்ரச்னம் – முகூர்த்தம் - நிமித்தம் சேர்ந்தது இன்னொரு கூறு.

கணிதம் - கோளம் என்பது கணித முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இதனை அடிப்படையாகக்கொண்டே பலன்கள் கணிக்கப்படுகின்றன.

ஜாதகம் – ப்ரச்னம் – முகூர்த்தம் - நிமித்தம் சேர்ந்த பகுதி, முன்கர்மவினையின் வெளிப்பாடாக, மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து முடிவுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியது.

ஜோதிடத்தில் கணிதம் மற்றும் கோளத்தின் பங்கு

ஜோதிடத்தில் கணிதம்

ஜோதிட சாஸ்திரத்தின் உணர்தல் இல்லாமல் ஆழமான பக்தி இருப்பினும் முழுப் பயனும் கிடைப்பது அரிது. அணுவின் அளவு நகரும் காலத்தின் கண நேரத்தையும் கணிதமாகக் கணித்துப் பார்த்து துல்லியமாக அறிய வேண்டியது ஜோதிட சாஸ்திரம். இவ்வாறு இருக்க, ஜோதிடத்தில் கணிதத்தின் பயன்பாடு என்பது இயற்கையால் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

சூரியக் குடும்பம் என்பது சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் சேர்ந்ததாகும். இவை கணத்துக்குக் கணம் நகர்ந்துகொண்டிருப்பதால், அவற்றின் இருப்பு நிலைகளில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில், இவை எவ்வாறு அமைகின்றன என்பதைக் கணிதத்தின் துணை கொண்டு கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தில் ஓரிரு நிமிட வித்தியாசம் இருந்தால்கூட, அதனால் மிகப்பெரிய அளவில் கணிப்புகள் தவறிவிட வாய்ப்பு உண்டு. அந்த வகையில், ஜோதிடத்தில் கணிதம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோதிடத்தின் அடிப்படை கணிதத்தைத் தெரிந்துகொள்வோம்.

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் கொண்டு ஜோதிடத்தில் கணிதம் கணிக்கப்படுகிறது. இதன் வழியாகத்தான் பலன்கள் பெறப்படுகின்றன.

12 ராசிகள் என்பது ஒரு முழுச்சுற்று. இதில் 27 நட்சத்திரங்களும் அடக்கம். இது பூமி, சூரியனை ஒருமுறை சுற்றிவரும் தூரமாகும். இதையே ராசி மண்டலம் என அழைக்கிறோம்.

பாகைகள், கலைகளின் பார்க்கும்போது 1 ராசி என்பது 30 பாகையாகவும், ஒரு பாகை 60 கலையாகவும் கொண்டால், ஒரு ராசி மண்டலத்துக்கு (12 ராசி X 30 பாகை X 60 கலை) 21600 கலைகள். ஒரு குழந்தையின் சுவாசமும் ஒரு நாளைக்கு 21600 கலைகள். ஒரு கலை மாறினாலும், கணக்கு எவ்வளவு துல்லியமாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. எனவே, மனிதனின் ஒவ்வொரு அசைவையும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன என்பது இங்கே உங்களுக்குப் புரியும். ஜோதிடத்தில் ‘சக்ஷ்யாம்ச’ என்ற ஒரு பிரிவு உள்ளது. இது 1 ராசியை 60-ஆகப் பிரித்துப் பலன்களைக் கூறுகிறது. காலம், அந்த அளவுக்குக் கணிதத்தை துல்லியமாகப் பயன்படுத்துகிறது.

காலம், இந்த அளவுக்குக் கணிதத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு தனி நபருக்குமான பலன்களைத் தனித்தனியே வழங்குகிறது எனும்போது, ராசியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தான் விரும்பும் பலன்களைப் பெற முற்படுவது தவறான நிலைப்பாடாகும்.

இந்தக் கணக்குகளுடன் பஞ்சபூதங்களின் தன்மையும் சேரும்போது, அதற்கான நிகழ்தகவுகள் (வாய்ப்புகள்) பன்மடங்காகிப்போகின்றன.

ஜோதிடத்தில் கோளம்

கிரகங்களைப் பற்றிய தீர்க்கமான அறிவு, அவற்றின் தன்மை, அவை நகரும் வேகம், அவற்றின் சுற்றளவு, இயல்பு, கிரகங்களுக்கு இடையேயான தூரம், சுழற்சி வேகம் போன்றவற்றைத் தெரிந்துகொள்வதற்கான வானியலை அடிப்படையாகக் கொண்ட கணிதமே கோளம்.

இந்திய வானியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆரியபட்டர். இந்தியாவில் வானியல், கணிதம், ஜோதிடம் என மூன்று துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியவர். இவருடைய காலம் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது.

ஆரியபட்டரால் அவரது காலத்தில் வெளியிடப்பட்ட சில வானியல் உண்மைகள், இன்று சரியென உறுதி செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சில –

  • ஒரு வருடத்தின் நீளம் 365.25 நாள்.

  • பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம், பூமியின் சுற்றளவுபோல் 108 மடங்கு.

  • சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம், சந்திரனின் சுற்றளவுபோல் 108 மடங்கு.

  • சூரியனை பூமி ஒரு முழு சுற்று சுற்றி முடிப்பதற்குள், பூமியைச் சந்திரன் 27 முறை சுற்றி வந்துவிடும். இதைத்தான் 27 நட்சத்திரங்கள் என ஜோதிடத்தில் பயன்படுத்துகிறோம்.

  • சூரியக் குடும்பம் என்பது சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் சேர்ந்தது. இவை நிமிடத்துக்கு நிமிடம் தன் இருப்பு நிலைகளில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் இவை எங்கு உள்ளது என்பது கணிதம் கொண்டு கணிக்கப்படுகிறது எனக் குறித்துக்கொண்டால், இவை அதே இடத்தை வந்தடைய 4320000 வருடங்கள் ஆகும். இன்றைய நவீன கம்ப்யூட்டர்களின் கணக்கீடும் அதேதான். அதாவது, சூரியக் குடும்பம் ஒரு முழுச் சுற்றை முடிக்க ஆகும் காலம் இதுதான்.

  • ஒரு குழந்தை ஜெனனமாகும்போது, ஒரு நாளில் அதன் சுவாசத்தின் அளவு 21600. இந்த எண்ணின் மடங்குகளே 4320000 என்பதாகும். எனவே, 4320000 என்பது மனித சுவாசத்தின் அளவில் 20 மடங்கு. ஆக, மனிதனுக்கும் வானியலுக்கும் உள்ள தொடர்புக்கு இந்த உண்மைகளே மிகச்சிறந்த சான்று.

  • மனித சுவாசத்தின் அளவு ஜோதிடத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம். சூரியனை பூமி சுற்றிவர ஆகும் காலம் 24 மணி நேரம். அதாவது 360 முழுச் சுற்று என்பது 12 ராசிகள் கொண்டது. ஒரு ராசி என்பது 30 பாகை ஆகும். 1 பாகை என்பது 60 கலை. அதாவது, ஒரு முழுச் சுற்றில் உள்ள கலைகள் 21600 (12 ராசி, 30 பாகை, 60 கலை)

ஆக, மனிதனின் ஒவ்வொரு சுவாசத்துக்கும் வான் மண்டலத்தில் உள்ள அனைத்தும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நம் ஒவ்வொரு அசைவுக்கும் கிரகங்கள் சம்மந்தப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

கிரகணங்கள் தோன்றக் காரணம், அது நிகழும் காலம் போன்றவை ஆரியபட்டரின் நூல்களில் துல்லியமாகக் காணப்படுகின்றன. இவையும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு சரியென தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணிதத்தில் முக்கோணவியலில் பயன்படுத்தப்படும் sine (சைன்) மதிப்பை துல்லியமாக அட்டவணைப்படுத்தி, அதை வானியலில் பயன்படுத்தியவர் ஆரியப்பட்டர்தான்.

இந்திய ஜோதிடவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் வராகமிஹிரர். இவர், ஆரியபட்டரின் முதன்மை மாணவர் ஆவார். ஆரியபட்டர் குருவாகக் கிடைத்த பலனால்தான், புவிஈர்ப்பு விசையைப் பற்றி சர் ஐசக் நியூட்டன் கூறுவதற்கு 800 ஆண்டுகள் முன்பே அதைப் பற்றி வராகமிஹிரர் தெள்ளத் தெளிவாகத் தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.

வராகமிஹிரர் பற்றி ஒரு சிறு குறிப்பு

ஒருமுறை, உஜ்ஜைனி நாட்டு அரசர் மாறுவேடத்தில் நகர்உலா வரும்போது, வருவது அரசர் என்பதை மிஹிரர் கண்டுபிடித்துவிட்டார். எப்படி என்று அரசர் வினவ, தன்னுடைய ஜோதிட அறிவால் கண்டுபிடித்தாக மிஹிரர் சொல்ல, அவரது ஜோதிட ஞானத்தை வியந்த அரசர், தன் அரசவைக்கு வருமாறு மிஹிரருக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசரின் வேண்டுகோளை ஏற்று மிஹிரரும் அவைக்குச் சென்றார். மிஹிரரை வரவேற்ற அரசர், அவரின் ஜோதிடப் புலமையை அவையில் உள்ள மற்ற ஜோதிடர்களிடமும் கூறி வெகுவாகப் பாராட்டினார். மேலும், அவையில் மிஹிரருக்கு ஜோதிடர் அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது. சிறிது காலம் கழித்து அரசருக்கு வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. தன் குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்குமாறு அவை ஜோதிடர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் அரசர். ஜாதகத்தைக் கணித்த ஒவ்வொரு ஜோதிடரும், குழந்தைக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து உள்ளதாகக் கூறினார். ஆனால் அரசரோ, மிஹிரர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் அவரை எதிர்நோக்கி இருந்தர்.

தனது கணிப்புடன் வந்த மிஹிரர், இந்தக் குழந்தை 18 வயது எய்தும்வரை மட்டுமே உயிருடன் இருக்கும், பிறகு மரணிக்கும். இதற்கு மாற்று பரிகாரங்கள் எதுவும் கிடையாது என்று கூறினார். இதைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்த அரசர், மரணம் என்றால் அது எப்படி நடக்கும்? எவ்வாறு நடக்கும்? எனக் கேட்டார்.

வராகம் (பன்றி) குத்தி மரணம் உண்டாகும் என்கிறார் மிஹிரர். அவ்வாறு நடக்கவில்லை எனில் மிஹிரர் சிறைபிடிக்கப்படுவார் என்று அரசர் உத்தரவு பிறப்பித்தார். பிறகு, தன் மகனை ஆபத்தில் இருந்து மீட்க, அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறையில் மிகுந்த பாதுகாப்புடன் தன் குழந்தையை வளர்த்தார். குழந்தைக்குத் தேவையான உணவுகளும் மற்ற பொருட்களும் பாதுகாவலர்களால் தாமதமின்றி கொடுக்கப்பட்டன. அறையைச் சுற்றி பாதுகாவலர்கள் எந்நேரமும் காவல் இருந்தனர்.

அனைவரும் காத்திருந்த நேரம் நெருங்கிவிட்டது. மணிக்கொரு முறை இளவரசரின் செயல்களைக் கண்காணிக்குமாறு அரசர் உத்தரவு பிறப்பித்தார். பிறகு மிஹிரருடன் இளவரசரின் அறைக்குச் சென்ற அவருக்கு ஒரு பேரதிர்ச்சி. அறையின் மேல்தளத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த உஜ்ஜைனி நாட்டின் சின்னமான வராகம் (பன்றி), காற்றினால் நிலை தடுமாறி இளவரசர் மீது விழுந்து வயிற்றில் குத்தப்பட்டு இறந்துகிடந்தார். மகனின் மரணத்தையும்விட மிஹிரரின் ஜோதிட ஞானத்தை வியந்த அரசர், மிஹிரருக்கு வராகமிஹிரர் என்ற பட்டத்தைக் கொடுத்தார்.

கோள்களுக்கும் மனிதர்களுக்கு இடையேயான அறிவியல் தொடர்பு

உலகில் உள்ள ஒவ்வொரு துகளும் மற்றொரு துகளை அதிக சக்தியுடன் ஈர்க்கின்றன. அந்தச் சக்தி (விசை), அந்தத் துகள்களின் நிறையின் பெருக்குத்தொகைக்கு நேர்விகிதத்திலும், அத்துகள்களுக்கு இடையேயான தூரத்தின் இருமடிக்கு தலைகீழ் விகிதத்திலும் இருக்கிறது.

 m1, m2

F α -------------

r 2

அதேபோல், வானத்தில் உள்ள ஒவ்வொரு துகள்களும் பூமியில் உள்ள ஒவ்வொரு துகளையும் ஈர்க்கிறது (interact). அமாவாசை, பெளர்ணமி நாள்களில், சந்திரனுடைய ஈர்ப்புத்தன்மை அதிகரிக்கும்போது, கடலில் அலைகள் இயல்புக்கு மாறாக மேலெழும்புகின்றன என்பது அறிவியல் மெய்ப்பித்திருக்கும் உண்மை. இதில், ஜோதிடத்தின் அறிவியல் தொடர்புபடுத்தப்படுகிறது.

ஜோதிடத்தின் அறிவியலைப் புரிந்துகொள்ளும்முன், நமக்குள் எழுந்திருக்கும் சில ஐயப்பாடுகள் களையப்பட வேண்டும்.

தொடர்ந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com