வாழ்க்கை சிறப்பாக இருக்க நம்பிக்கை வைக்க வேண்டிய மாதம் கார்த்திகை மாதமாகும். முருகப்பெருமானை வணங்கி வழிபட உகந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகேயன் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால் பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நமக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களும் நீங்கும்.
திருக்கார்த்திகை
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை தான் 'திருக்கார்த்திகை" என்றும், 'பெரிய கார்த்திகை" என்றும் அழைக்கின்றோம். திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறுதினம் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதையும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படத்தோடு அருகில் முருகப்பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக இருக்கும்.
விரத வழிபாடு
கார்த்திகை மாதத்தில் விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். பெண்களுக்கு நல்ல கணவனும், ஆண்களுக்கு நல்ல மனைவியும் அமையும் மற்றும் குழந்தை பாக்கியம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த விரதம் பலன் தருகின்றது.
இந்த விரதத்தின் மூலம் தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். அமாவாசை விரதம் போல, கார்த்திகை விரதமன்றும் காக்கை அல்லது பசுவிற்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகே நாம் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பகலில் பசும்பால் மட்டும் அருந்தலாம். பழம் சாப்பிடலாம். அன்று மாலை பால், பழம், பருப்பு பாயசம் சாப்பிடலாம்.
மறுநாள் பச்சரிசி சாதம், பருப்பு, வாழைக்காய் அவியல், கூட்டு ஆகியவற்றை உட்கொள்வது நல்லது. கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், இனிப்பு உருண்டைகளை நைவேத்தியமாக வீட்டில் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை படித்து வழிபடுவது நல்லது.
கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து தானம் செய்தால் வம்சம் மற்றும் பரம்பரையினர்களுக்கு அளவற்ற நன்மைகள் கிடைக்கும். எனவே, சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து எல்லா வளங்களையும் பெறுவோம்..!