திருவண்ணாமலை ஈசனை வணங்கிவிட்டுத் திருவோத்தூர் என்னும் திருத்தலத்தை அடைந்தார் திருஞானசம்பந்தர். சிவபெருமானை வணங்கி அவ்வூரில் தங்கியிருக்கும் நாள்களில், அவ்வூர் அடியார் ஒருவர் அழுதுகொண்டே வந்தார்.
இறைவன் - வேதபுரீஸ்வரர், வேதநாதர்.
இறைவி - பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.
இறைவனுடைய திருப்பணிக்கென்று சில பனை மரங்களை வைத்து வளர்த்திருந்தார் அவர். அவற்றின் காய்களை இறைவனுக்கு என்றும் அடியிட்டிருந்தார். ஆனால், எல்லா பனை மரங்களும் ஆண் பனைகளாகிவிட்டன. அந்த அடியவரை, ஊர்க்காரர்கள் பலர் கேலி செய்து பரிகசித்தனர். "முடிந்தால் உன் தெய்வம், ஆண்மரத்தில் காய்கள் தரட்டுமே பார்க்கலாம்'' என்று கேலி பேசினர்.
வருத்தத்துடன் வந்து ஞான
சம்பந்தரிடம் இவற்றைச் சொல்லிக்
கலங்கினார் அந்த அடியார்.
திருவோத்தூர் திருக்கோயிலுக்குச் சென்ற திருஞானசம்பந்தர், ஆலய வாசலில் நின்று வணங்கினார். பின்னர் சுற்றுமுற்றும் தன் பார்வையைச் செலுத்திப் பனைமரங்களைப் பார்த்தார். அதற்கும் பின்னர்,
பதிகம் பாடினார். பதிகம் பாடி முடிக்கும்போது, ஆண் பனைமரங்கள் எல்லாம் குலை குலையாகக் காய்கள் காய்த்துத் தொங்கின.
ஆண்பனைகளைக் குலை தள்ள வைத்து, திருவோத்தூரில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
"பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தா தார்இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளிமழு வாள்அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே.''
திருஓத்தூர் தலத்தினைச்
சென்றடையும் வழி:
காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மக்கள் வழக்கில் செய்யாறு. வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் இவ்வூருக்கு வரலாம். பேருந்து நிலையம் உள்ளது.