தென்காசி அய்யாபுரம் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் சுமார் 6 தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா தேவி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும், அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதியம்மனுக்கும், மகன் பைரவருக்கும் கடந்த 24 வருடங்களாக நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா, கடந்த அக்டோபர் 2-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது, இரவில் தேவி ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் புகழ் கரகாட்டம் நடைபெற்றது.
2-வது நாள் காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்த முளைப்பாரி ஊர்வலமும், குற்றாலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதலும், இரவில் திருநெல்வேலி புகழ் சங்கராம்பாள் வில்லிசை கச்சேரியும் நடந்தது.
பூக்குழி இறங்குதல்:
இரவு சரியாக 12 மணியளவில் 21 அடி நிலம் கொண்ட பூக்குழியில் பூவளர்த்து, அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதி அம்மன் ஆலயத்தில் வைத்து உலகின் அனைத்து தெய்வங்களையும் எழுந்தருளசெய்து புதன் அதிகாலை 4.30 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். பின்னர் மஞ்சள் நீராட்டும் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. விழாவைக் காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மூன்று (02, 03, 04) நாள் திருவிழா ஏற்பாடுகளை அய்யாபுரம் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். 5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீமுப்புடாதியம்மனுக்கு சித்திரை மாதத்திலும், 2 நாள் கொடையாக மகன் பைரவருக்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-காத்திகேயன் நடராஜன்