நவக்கிரகங்களிலும் நாம் அதிகமாகப் பயப்படுவது சனி பகவானுக்கு மட்டும்தான். அதே சமயம், இவரிடம் நாம் அகப்பட்டால் எப்படியெல்லாம் ஆட்டிப் படைப்பாரோ என்று நினைப்பதுண்டு.
சனி பகவான் அவர் தனது கடமையே செய்கிறார். நாம் அனாவசியமாக பயம் கொள்ளத் தேவையில்லை. சனிதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தினை பின்பற்றினால் சனிபகவானால் ஏற்படும் தோஷத்தின் தாக்கம் குறையும்.
• சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.
• சனிக்கிழமைகளில் ஒரு வேளை உணவுடன் விரதம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.
• எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்.
• சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.
• சனிக்கிழமைகளில் சனிபகவான் கோவிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.
• சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அவைகளை அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
• சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள், அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம். மண்டல பூஜையும் செய்யலாம்.
• அவரவர்களது பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்று ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மைகளைத் தரும்.
• ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி முதலிய தேவதைகளையும் ஆராதனை செய்யலாம்.
• தினசரி நவக்கிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.