சிலர் பிறந்தது முதல் எப்போதும் பொன்னோடும், பொருளோடும் வாழ்வார்கள். நல்ல அணிகலன்களை அணிந்து மகிழ்வார்கள். ஆனால் பலர் தங்கம் எங்கே என்று தேடுவார்கள். எப்போதும் நல்ல அணிகலன்களோடு வாழும் ஜாதகம் பெற்றவர்கள் யார் என்பதையும், வாழ்நாள் முழுவதும் பொன்னகையோடும், புன்னகையோடும் வாழச் செய்ய வேண்டிய பரிகாரங்களை காண்போம்.
பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், குழந்தை பிறந்தது முதலே தங்கம் சேர்த்தால் தான் திருமண வயதில் சிரமமில்லாமல் சமாளிக்க முடியும். பெற்றோர் இதை உணர்ந்து சேமிப்பையும் உயர்த்த வேண்டும்.
இனி அணிகலன்களைப் பெற்று வாழும் யோக ஜாதங்களை பற்றி பார்ப்போம்.
லக்னத்துக்கு 3-ம் பாவத்தின் சுக்கிரன் நிற்கவும், 3-ம் வீட்டிற்குரிய கிரகம் சுக்கிரன் வீட்டில் நிற்கவும் அமைந்துள்ள ஜாதகர்கள், முத்துமாலை அணியும் யோகம் உள்ளவர்கள். இவர்கள் உடல் எப்போதும் பொன்னிறமாக இருக்கும். லக்னத்துக்கு 3-ம் வீட்டில் சந்திரனும், 5-ம் வீட்டில் குரு பகவானும் வலிமைபெற்று அமைந்தால், அந்த ஜாதகர்கள் நவரத்தின மாலை அணியும் அளவுக்கு யோகத்தைப் பெற்றவர்கள்.
லக்னத்துக்கு 3-ம் வீட்டில் கேது நின்றிடவும், 3-ம் வீட்டிற்குரிய கிரகமும், 2-ம் வீட்டிற்குரிய கிரகமும், 9-ம் வீட்டில் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள், எப்போதும் நவரத்தினங்களை அணிவார்கள்.
லக்னத்துக்கு 8-ம் வீட்டிற்குரிய கிரகமும், ராகுவும் சேர்ந்து 9-ம் வீட்டில் நின்றால், ஜாதகர்கள் மத்திய வயதில் சிலகாலம் பொன் ஆபரணங்களை அணியும் யோகத்தைப் பெறுவர். பிறப்பு ஜாதகப்படி சந்திரன் நின்ற வீட்டிற்கு 2-ம் வீட்டிற்குரிய கிரகம், லக்னத்துக்கு விரய ஸ்தானமான 12-ம் வீட்டில் நின்று, அந்தக் கிரகத்தை செவ்வாய் பார்த்தால் ஜாதகருக்கு ஏராளமான செல்வமும் ஆடை, ஆபரணங்களும் இருக்கும். ஆனால் அவர் எளிமையாக எதையும் அணியாமல் வாழ்வார்.
ஜாதகத்தில் 3ம் வீட்டிற்குரிய கிரகம் 8-ம் வீட்டில் நிற்கவும், 8-ம் வீட்டிற்குரிய கிரகம் 3-ம் வீட்டில் நின்றிடவும் அமைந்த ஜாதகர்கள் தங்க நகைகளின் மீது பற்றுள்ளவர்கள். ஆனால் இவர்கள் அணிவதற்கு தகுந்த வசதி வாய்ப்புகள் கிடைக்காமல் மற்றவர்களைப் பார்த்து வருந்துவார்கள்.
வீட்டில் தங்கம் சேர எளியப் பரிகாரங்கள்!
நகை வாங்கும் போது, நல்ல நாளில் வாங்கலாம். குளிகை காலத்தில் வாங்கினால் தங்க நகை திரும்ப திரும்ப வாங்கும் யோகம் உண்டாகும். சிரமப்பட்டு வாங்கும் தங்க நகைகளை நல்ல நேரத்தில் அணியலாம். குளிகை காலத்தில் அணிந்தால் நல்லது. இவ்வாறு செய்து வந்தால் தங்க ஆபரணம் உங்களைவிட்டுப் போகாது.
தங்கத்திற்குரிய கடவுள் குரு பகவான். எனவே தான் அவரை பொன்னன் என்று அழைக்கிறோம். நகை வேண்டுவோர் வியாழக்கிழமையில் குரு பகவானை வேண்டிவர, நகை படிப்படியாக வந்துசேரும். அனுக்கிரகமும் கிடைக்கும்.