கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப் பெயர்ச்சி பலன்கள் (தனுசு முதல் மீனம் வரை)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்த 12 ராசிக்காரர்களுக்குமான குருப்பெயர்ச்சி பலன்களை படித்துப் பலன்பெறுங்கள்.
கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப் பெயர்ச்சி பலன்கள் (தனுசு முதல் மீனம் வரை)

2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உள்பட தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் முதல் நான்கு ராசிகளுக்கான பலன்களை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நமக்ககு கணித்து வழங்கியுள்ளார்.

இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 24-ம் தேதி (9.9.2017) தேய்பிறை சதுர்த்தி, சனிக்கிழமை இரவு 8.41 (ஐ.எஸ்.டி) மணிக்கு சனிபகவான் ஹோரையில் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ராகு-கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசிகளிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இங்கு, 22.3.2019 வரை சஞ்சரித்துவிட்டு, 23.3.2019 அன்று மாலை 4.14 (ஐ.எஸ்.டி) மணிக்கு மிதுன தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

குருபகவான் இந்த ஹேவிளம்பி ஆண்டு, ஆவணி மாதம், 27-ம் தேதி (12.9.2017), தேய்பிறை சப்தமி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை காலை 7.00 (ஐ.எஸ்.டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 9.3.2018 அன்று குருபகவான் துலாம் ராசியில் ஸ்தம்பித்து 10.3.2018 அன்று துலாம் ராசியிலேயே வக்கிர நிவர்த்தி ஆகி, 11.10.2018 வியாழக்கிழமை இரவு 7.20 (ஐ.எஸ்.டி) மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

***

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் அனைத்துச் செயல்களிலும் மனோதைரியமும் உறுதியான சிந்தனைகளும் உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள பலர் முன்வருவார்கள்.  நண்பர்களுடன் சேர்ந்து புதிய வாய்ப்புகளைச் செயல்படுத்துவீர்கள் . அதிர்ஷ்ட வாய்ப்பொன்று உங்கள் வாசல் கதவைத் தட்டும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் பணிவாக இருப்பார்கள். 

சுதந்திரமாக மற்றவர்கள் தூண்டுதல் இல்லாமல் பணியாற்றுவீர்கள். நல்ல வருமானமும் அந்தஸ்தும் உண்டாகும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முயல்வீர்கள். சமூகத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தில் இருப்பீர்கள். புதிய மொழிகளைக் கற்றுதேர்ச்சியடைவீர்கள். முகத்தில் பொலிவும் பேச்சில் தெளிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு செயலாற்றினால் மேலும் உயர்வடையலாம்.

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அனைவரையும் அனுசரித்துச் சென்று சுமுக உறவை காத்துக் கொள்வீர்கள். உங்கள் செல்வாக்குக்கும் கௌரவத்திற்கும் எந்த பங்கமும் வராது.செய்யும் தொழிலில் சிறு இடையூறுகள் வந்தாலும் உங்களின் விடா முயற்சிகளால் அவைகளை முறியடித்து விடுவீர்கள். பங்கு வர்த்தகங்களின் மூலம் அதிக லாபங்களை எதிர்பார்க்க முடியாது. எதிரிகள் வகையிலும் ஓர் எச்சரிக்கை உணர்வு தேவை. 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள். தொழில் விருத்திக்காக உழைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பாதிப்பு எதுவும் இல்லாமல் சீராக இருக்கும். உடல்நலத்தையும் மனவளத்தையும்  கூட்ட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் உதவி கிடைத்து வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கும். களவு போயிருந்த பொருள்கள் திரும்பக் கிடைக்கும். முரட்டுச் சுபாவம் மாறி சாந்தகுணம் மேலோங்கும். மற்றபடி நானே ராஜா, நானே மந்திரி என்கிற ரீதியில் மகிழ்ச்சியுடன் செயலாற்றும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளில் சிக்கிக் தவித்தாலும் உங்களின் அசாத்திய துணிச்சல் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம். பயணங்கள் மனநிம்மதியைத் தரும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு சச்சரவுகள் இல்லாமல் பணியாற்றி உங்கள் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளவும். 

வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரம் செய்து முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீண் பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் நல்ல லாபம் காண்பார்கள். நண்பர்களும் கூட்டாளிகளும் நல்லவிதமாக உதவிகள் செய்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய கழனிகளை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். தரமான விதைகளைப் பயிரிடுவீர்கள். சிலர் குறுகிய காலப்பயிர்களை உற்பத்தி  செய்து இரட்டிப்பு லாபத்தை அடைவீர்கள். பழைய கடன்கள் தீரும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.  தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் கிடைக்கும். 

பெண்மணிகளின் உடல்நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துச் செலவுகள் உண்டாகாது. கணவரிடம் விட்டுக்கொடுத்துச் சென்று செயல்களை நிறைவுடன் செய்து முடிப்பர். கணவர் வழி உறவினர்கள் மத்தியில் உங்கள் புகழ் வளரும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சிகள் மேற்கொள்ளவும்.  

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

***
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டு அற்புதமான காரியங்கள் செய்து புகழ் பெறுவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். இடையூறுகளைக் கண்டு கலக்கமடைய வேண்டாம். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தோருக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் அன்பையும் ஆதரவையும் தக்கவைத்துக்கொள்வீர்கள். புதியவர்களின் நட்புகளைப் பெறுவீர்கள். இதனால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். வெளிநபர்களிடம் அநாவசியமாக பிரச்னைகள் வேண்டாம். புதிய கடனையும் தவிர்க்கவும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். சமுதாயத்தில் புகழும் கௌரவமும் கூடும்.  

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் மந்தமான செயல்கள் சுறுசுறுப்பாக நடக்கத் தொடங்கி இலக்குகளை சுலபமாக எட்டுவீர்கள். உடலில் இருந்த ஆயாசமும் பறந்துவிடும்.  சுலபமான முடிவுகளை எடுப்பீர்கள். தயக்கம் காட்டிய முயற்சிகளில் முழுமனதுடன் செயல்படுத்துவீர்கள், உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை சரியான நேரத்தில் கைதூக்கி விடுவீர்கள். செல்வாக்கோடு வலம் வருவீர்கள். புதிய தொழில் நுட்பங்களையும் ஆராய்ந்து கற்பீர்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்குப்பிடித்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் தெளிந்த சிந்தனைகளால் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தாக்குப்பிடித்து தளராமல் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் மறையும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் அனைத்து காரியங்களையும் சரியாகத் திட்டமிட்டு முன்னெச்சரிக்கை உணர்வுடன் செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் ஏதேனும் ஒரு குறை ஏற்படலாமென்பதால் முழுதிருப்தியுடன் வெற்றி பெறுவது கடினம் என்கிற நிலையில் இந்த காலகட்டம் அமைகிறது. 

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கெடுபிடிகள் குறையக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.  எதிர்பார்த்த பணவரவு உண்டாகி உங்களின் கஷ்டம் குறையும். புதிய பொறுப்புகளைப் பெற்று உங்கள் மதிப்பு உயரும். பதவி உயர்வும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதில் தாமதமேற்படும். கூட்டாளிகளுடன் குழப்பமான சூழ்நிலை உருவாகலாம். அதனால் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். வியாபாரத்தைப் பெருக்க புதிய கடன்களை வாங்குவீர்கள்; குறித்த காலத்திற்குள் திரும்பச் செலுத்துவீர்கள். சிலருக்கு வழக்குகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பார்கள். சக விவசாயிகளின் உதவிகளை தக்க நேரத்தில் பெறுவீர்கள், வயல்வரப்பு சண்டைகளில் முடிவைக் காண்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். புதிய குத்தகைகளை நாடிப் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும் செயல்திறனும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமான திருப்பங்களைச் சந்திக்கும். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயரும் புகழும் உயரும். 

கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன நல்ல வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும்.  உங்களின் தோற்றத்தில் கவர்ச்சி உண்டாகும். மிடுக்கான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். தொழிலில் திறமையுடனும் தெளிவுடனும் பணியாற்றி முன்பைவிட வருமானத்தைக் காண்பீர்கள்.  

பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள்.  சரளமான பணவரவால் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளுடனும் விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். 

மாணவமணிகள் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் அனுசரணை போக்கால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

***
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில்  தெய்வ பலம் அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கும். அதனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்கிற ரீதியில் கஷ்டங்கள் மறையும். நேர்த்திக் கடன்களை குடும்பத்துடன் சென்று செலுத்திவிடுவீர்கள்.

பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வருமானத்தின் ஒரு பகுதியை தரும காரியங்களுக்குச் செலவிடுவீர்கள். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். பெற்றோர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பயணங்களாலும் நன்மைகள் உண்டாகும். நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். கடினமான வேலைகளைச் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். பொருளாதாரம் ஏற்றமாகவே இருக்கும்.  

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கவலைகள் யாவும் படிப்படியாக குறையும். கல்வியில் முன்னேறுவீர்கள். உடன்பிறந்தோருக்கு குறிப்பாக இளையவர்களுக்குச் சாதகமாக இருப்பீர்கள். முன் கோபத்தைத் தவிர்த்தால் நல்லது. பண விஷயத்திலும் சேமிப்பு விஷயத்திலும் கவனமாக இருக்கவும். நண்பர்களுக்கு கடன் கொடுத்தால் நட்பை இழக்க நேரிடும். நண்பர்களின் குறைகளைப் பெரிது படுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைச் சிறப்பாக பராமரிப்பீர்கள்.  

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் நெடுநாளைய ஆசை பூர்த்தியாகும். மனதில் திருப்தி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியமும் உண்டாகும். இல்லத்திற்குத் தேவையான நவீன பொருள்களை வாங்குவீர்கள். சமயத்திற்கு ஏற்றாற்போல் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.

நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறைந்து தனிக்காட்டு ராஜாவாக வலம் வருவீர்கள். "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்களே!' அதற்கேற்றாற் போல் உங்களுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அடுத்தவர்களின் உதவியில்லாமல் காரியங்களைச் செய்யும் ஆற்றல் உண்டாகும். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற வகையில் பிரகாசிப்பீர்கள் என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் தொய்வு இல்லாமல் நடந்து முடியும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். சிறுசிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பணவரவிற்குக் குறைவு ஏற்படாது.  

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சீரான நிலையை காண்பார்கள். கடினமான விஷயங்களைச் செய்ய முயற்சிக்க வேண்டாம். கூட்டாளிகள் செய்யும் மறைமுகத் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருக்கவும். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்கால கனவுகள் பலிக்க ரகசிய திட்டங்கள் திட்டுவீர்கள். விவசாயிகள் குறுகிய காலப்பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை நன்கு யோசித்து எடுக்கவும்.  

அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளைச் சரிவரச் செய்து முடிப்பீர்கள். அனாவசியப் பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடலாம். உட்கட்சிப் பூசல்களிலிருந்து  ஒதுங்கி " கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் பணியாற்றவும். காரியங்கள் தாமதமானாலும் பிறகு சரியாகிவிடும். 

கலைத்துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். சிறிய தடைகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். வெளிவட்டாரத்தில் பழகும் போது கவனமாக இருக்கவும். அனாவசியப் பழிகளுக்கு நீங்கள் ஆளாக நேரிடும். உடன்பிறந்தோர் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். 

மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்து படிக்கவும். மாநில அளவில் சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு இருப்பதால் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

***

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

12.9.2017 முதல் 9.3.2018 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உற்றார் உறவினர்களிடம் மிகவும் நெருங்காமலும் பெரிதும் விலகாமலும் இருந்து செயல்படுவீர்கள்.  வழக்கு விஷயங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் செய்வீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். சிக்கனமாக இருந்து சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். 

எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்வீர்கள். இல்லத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு சொத்துகள் கைவந்து சேரும். தர்ம சிந்தனை மேலோங்கும். சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து சரியான முடிவெடுப்பீர்கள். வேலைகளில் பளு கூடும். இருப்பினும் உற்சாகத்துடன் காரியமாற்றுவீர்கள். சேமிப்பையும் சரியான முறையில் முதலீடு செய்வது அவசியம். பெரியவர்களிடம் பேசும்போது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். எனவே யோசித்துப் பேசவும். 

10.3.2018 முதல் 11.7.2018  வரை உள்ள காலகட்டத்தில் நடக்காது என்று பயந்த காரியங்கள் சுலபமாக நடக்கும். செய்தொழிலில் புதிய  மெருகு கூடும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்களை விட்டுப்பிரிந்துபோன நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தவர்கள் தானாகவே அடங்கிப்போவார்கள். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். செயல்களில் முக்கிய திருப்புமுனையை காண்பீர்கள். 

12.7.2018 முதல் 11.10.2018 வரை உள்ள காலகட்டத்தில் மனதில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் குறைவு உண்டாகாது. பழைய கடன்களிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.  நூதன பயிற்சிகளில் சிரமமின்றி வெற்றி பெறுவீர்கள். நினைவாற்றல் கூடும்.  மனதில் தோன்றும் எண்ணங்களை உத்வேகத்துடன் செயல்படுத்துவீர்கள். முன்னேற்றகரமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்கால மகத்தான சாதனைகளுக்கு அடித்தளமாக அமையும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் குளறுபடிகள் ஏற்படாது. ஊதியம் சரியாக வந்து கொண்டிருக்கும். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கோபப்பட்டு எவரிடமும் பேச வேண்டாம். மேலதிகாரிகளிடம் அவசரப்பட்டு பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக நடக்கும்.

வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகள் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் பெரிய மாற்றங்கள் எதையும் சந்திக்க முடியாமல் போகும். பழைய குத்தகைகளை முடித்துக் கொடுத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். தேவைக்கேற்ப வருமானம் வந்துகொண்டிருந்தாலும் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொண்டு செயல்களை முடிப்பீர்கள். கட்சிப்பிரசாரங்களில்  முழுமூச்சுடன் இறங்குவீர்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். நண்பர்களால் ஏற்றம் பெறுவீர்கள். 

கலைத்துறையினருக்கு யோகபாக்கியங்கள் கூடும். புதிய வாழ்க்கை முறையை தேர்தெடுப்பீர்கள். துறையில் புதிய அணுகுமுறைகளைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள்.சக கலைஞர்களை அரவணைத்துச் செல்லவும்.  

பெண்மணிகளுக்கு பெற்றோர் வழியில் பெருமைகள் வந்து சேரும். பிள்ளைகளாலும் பெயரும் புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

மாணவமணிகள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் படிப்பில் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்.  நண்பர்களுடன் சேர்ந்து தகாத செயல்களிலும் ஈடுபட வேண்டாம். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.


மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படிக்க - https://goo.gl/FhWNvb

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படிக்க - https://goo.gl/UwQ9f2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com