கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 7 

காசிப முனிவர் புத்திரராகிய காலவ முனிவர் சிவ புண்ணிய மேலீட்டினால், இருவினையொப்பும் மலபரிபாகமும், சத்திநிபாதமும் உற்று, பாசத்தையும்,
கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 7 

காசிப முனிவர் புத்திரராகிய காலவ முனிவர் சிவ புண்ணிய மேலீட்டினால், இருவினையொப்பும் மலபரிபாகமும், சத்திநிபாதமும் உற்று, பாசத்தையும், பாசத்தையுடைய பசுவையும், பசுவுக்குப் பதியாகிய சிவபிரானையும் தமது மதிநுட்பத்தினாலே ஆராய்ந்து பதிந்து அடைவதற்குரிய நெறி சிவலிங்கோபாசனையே என்றார்.

அந்த உபாசனை எளிதில் கைகூடுதற்குரிய தலம் கோவை திருப்பேரூரே என்றும் உணர்ந்தார். எனவே, அத்திருப்பேரூரை அடைந்து, காஞ்சி நதியில் மூழ்கி சுவாமி தரிசனம் செய்தார். தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினார். அத்தீர்த்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து வந்தார். இதுவே காலவ தீர்த்தம். அவ்வாற்றங்கரையில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து வந்தார். அங்கிருந்த தீர்த்தத்தை அபிஷேகித்து அர்ச்சனை புரிந்து, தினந்தோறும் பஞ்சாக்ஷரத்தைப் பதினைந்தாயிரம் உரு ஜெபித்து வந்தார். இங்ஙனம் பதினாயிர வருஷம் தவம் செய்தார்.

இத்தவத்திற்கு அருட்குறியினின்று சிவபிரான் தோன்ற, அவரைக் காலவ முனிவர் வழிபட்டு வரங்கள் பெற்றுத் தீக்ஷயுற்று, சித்தாந்த மகா வாக்கியோபதேசங் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து, நிட்டைகூடி வெள்ளியம்பலத் திருக்கூத்தையும் தரிசிக்க விரும்பி இருந்தனர். 

காலவ முனிவர் ஆலயத்திற்குக் காலவேச்சுரமென்ற தீர்த்தத்திற்குக் காலவ தீர்த்தத்மென்றும் பெயர். இவ்வாலயம் பட்டீசராலயத்திற்கு ஈசான திக்கில் இருக்கின்றது.

காமதேனு வழிபடு படலம்

சுவாயம்பு மனுப்பட்டத்தில், சகரன் எனும் அரசன் அரசாட்சி புரியுங்கால், பிரம்மதேவர் பிரஜைகளைப் படைக்கும் வண்ணம் எண்ணிச் சிவயோகத்தில் இருந்தபொழுது தீய ஊழினால் நித்திரை செய்தனர். 

அதனை இந்திராதி தேவர்கள் முகமாக உணர்ந்த விஷ்ணு மூர்த்தி காமதேனுவை நோக்கி, "நீ தவம் புரிந்து சிவபிரான் திருவருள் பெற்றுச் சிருட்டித் தொழில் செய்வாயாக" என்ற போது காமதேனு இமயமலையை எய்தி ஆயிரம்தேவ வருடம் அருந்தவம் புரிந்தும் சிவபெருமான் அருளாமேபற்றிக் கவலையுற்றிருக்கும் காலத்து நேர்பட்ட நாரத முனிவர் ஏவுதலால், அதி ரகசியமாக தலமாகிய ஆதிபுரியை அடுத்துக் காஞ்சி நதியில் வாஞ்சையோடு மூழ்கி, அசரீரி வாக்கின்படியே ஆதிலிங்க மூர்த்திமீது தனது பாலைப்
பொழிந்து பூசித்துக் கொண்டிருந்தது.

குழகன்-குழம்புச் சுவடுற்ற படலம்

ஆதிலிங்கத்தினருகே பட்டியிட்டு இருக்குங்கால் ஒரு நாள், காமதேனு முற்பகலிலே சிவபூசை செய்து சிவயோகத்தில் இருந்தது. அப்பொழுது சூரியன் அந்தமனமாகிச் சந்திரன் உதயமான காலத்தில், அக்காமதேனுவின் கன்றானது விளையாட்டினால் அண்டங்கங்கள் குலையும்படி அங்கும் இங்குமாக மேய்ந்து அலைந்து. அப்படி அலைந்து திரிந்த கன்றானது அண்ட நாயகராகிய "ஆதிலிங்க மூர்த்தி" அருமைத் திருமேனியை மறைத்திருந்த மேருமலையாகிய புற்றுக்களால் சூழப்பட்ட இடத்தினை கன்று குளம்புகளால் மிதித்தது.

தன் கால் குழம்பினால் கோதி கிளர்த்தியது. கால் குளம்புகள் தடுத்திடற குனிந்து தன் கொம்புகளால் குத்தி சிதைத்தது. கன்று கிளறி களோபரமாக புற்றைச் சேதப்படுத்த, மேருமலையின் உருக்கமாகியிருந்த புற்றின் மணல் துகள்கள் பிரிந்தன.

கன்றின் காற்குளம்பு புற்றினை கடுமையாக மோதி கிளர்த்தியதில் புற்றினுள் இருந்த ஒருவித ஈரப்பதம் ஆனதால் புற்றுமண் முழுமையும் கரையப்பட்டு, புற்றினைச் சுற்றி குருதி பெருகியோடி வழிந்தது. கன்றின் திருவடி, ஏற்கனவே புற்றினுள் உருவாக்கமாயிருந்த ஈசனின் திருமுடியில் அழுந்திப் பெயர்க்கக் கூடாமை போகவே, பின்பு  தன் கொம்புகளாற் குத்திக்கிளறியதால் ஆதிலிங்கேசர் திருமுடியில் பட்டு உதிரம் பெருக அழுந்தியதின் விளைவு இப்போது புற்றினைச் சுற்றிக் குருதி வெள்ளம். உள்ளேயுள்ள அக்குழகர் அக்குளம்புச் சுவட்டினை உடையவரானார்.

பின்பு காமதேனு சூரியோதய காலத்தில், தன் கன்றினைத் தேடியது. அவ்விடம் வந்த காமதேனு தன் கன்றின் நிலையறிந்து கவலை கொண்டு வருந்தின, காமதேனுவின் வருத்தம் நீடிக்கவிடாத சிவபிரான் உடனடியாக காமதேனுவுக்கு முன் காட்சியானார். சிவபெருமான் இடபாரூடராய் எழுந்தருளி, காமதேனுவை நோக்கி  "உனதிளங்கன்றின் விளையாட்டினால் உற்றதைக் குற்றமாக உள்ளத்திற் சற்றும் பற்றிலோம்" என்றார்.

"உமாதேவி முலைத் தழும்பையும் வளைத்தழும்பையும் மார்பினிற் கொண்டது போல முடியின் கண்ணே, குளப்படிச் சுவடையும் கோட்டின் சுவடையும் குதூகலத்தோடு கொண்டருளினோம்;"

"உனது கருத்துப்படி இப்போது பக்தியும், பின்னொருநாளில் நடன தரிசனமும், கடைசிமுடிவில் முத்தியும் தந்தருளுவோம்;"

"நீ வழிபட்டுத் தங்கியபடியால் இத்திருப்பேரூர் காமதேனுபுரம், பட்டிபுரி என்னும் பெயர்கள் பெற பட்டிநாதர் என்னும் நாமதேயத்தை நாமும் பெற்றோமென்று திருவாய் மலர்ந்து, மேலும்.. இது முத்தித்தலமாதலால், நீ கருதிய சிருட்டித் தொழிலைப் பற்றி வஞ்சி என்கிற "திருக்கருவூரிலே" அநுக்கிரகிப்போமென்றனர். 

அவ்வாறே காமதேனு வஞ்சித்தலத்திற்கு சென்று வரம் பெற்றுச் சிருட்டித் தொழிலைச் செய்தது. பட்டிப் பெருமானது திருமுடியிலே பசுக்கன்றின் காற்குளம்புகளின் சுவடுகளும் கொம்பு குத்திய சுவடும் இன்றைக்கும் நாம் காணும்படியான அருளோடு உள்ளன.

தென் கைலாயப் படலம்

கீழைச் சிதம்பரம் எனும் ஷேத்திரத்தில், சிவபெருமான் தமது அருட்சத்தியாகிய உமாதேவியார் காண, மேலைச்சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவஞ் செய்தருளுவார். அத்திருநடனத்தைத் தரிசிக்கும்படி சிவபிரானது கட்டளையினால், வியாக்கிரபாத முனிவர் கீழைச்சிதம்பரத்திற்கு சென்று, பத்தியினால் வழிபட்டுப் பல காலம் தவம் பயின்று வதிந்தார். 

அப்பொழுது கர்மமே கர்த்தா என்னும் கொள்கையுடைய தேவதாருவனத்து முனிவர்களைத் தடுத்தாட் கொள்ளும் வண்ணம் சிவபிரான் பிட்சாடன மூர்த்தியாகி அம்முனிவர்களுடைய பத்தினிகளிடத்தே சென்று, கற்பு நிலையைக் கலக்கியும், அவராஞ்ஞைப்படி விட்டுணு மூர்த்தி மோகினியாகி, அம்முனிவர்கள் தவ நிலையை அவநிலையாக்கியும், அவ்விருடிகள் கர்வபங்கமான பின்பு அவ்வனத்தின் கண்ணே சிவபிரான் திருநடஞ் செய்தருளினார். 

அந்நிருத்தத்தைத் தரிசித்த திருமால், ஆதிசேடன் மீது சயனித்து, ஒருதினம் விழிக்கும் காலையில், கண்களினின்றும் ஆனந்த நீர் பொழியவும் உடல் முழுதும் உரோமாஞ்சிதங் கொள்ளவும் பேரன்போடு "சங்கரா சங்கரா" என்று ஆரவாரித்தனர்.

அப்பொழுது ஆதிசேடன் அடுத்து வினவியதற்கு, விட்டுணு தேவதாரு வனத்தில் நிகழ்ந்த நிருத்த தரிசனத்தைக் குறிப்பிட்டளவில், அத்திருக் கூட்டத்தைத் தரிசிக்கும் பொருட்டு ஆதிசேடன் ஆசை மிகுந்து விடை பெற்று மேருமலையைச் சார்ந்து தவம் செய்தார். ஆதிசேடனின் தவத்திற்கு எதிர்வந்த தில்லையம்பலத்தைச் சேரும்வண்ணம் சிவபெருமான் அருள் புரிந்தார்.

அவ்வாறே அத்திரி முனிவர் பத்தினியாகிய அனசூயையிடத்திற் பதஞ்சலி முனிவராக அவதரித்துத் தில்லைப் பகுதியில் வியாக்கிரபாத முனியோடு தாமும் பஞ்சகிருத்தியத் திருக்கூத்தைத் தரிசித்திருந்தனர்.

அச்செய்தியை அறிந்த மால் திருக்கைலாச மலையைச் சேர்ந்து சிவபெருமானைத் திரிகரணங்களாலும் சேவித்து தில்லைச் திருச்சிற்றம்பலத் திருநடன தரிசனத்தின் பேராவாவைப் பெரிதும் விண்ணப்பம் செய்தனர்.

அதற்குத் திருக்கைலாசபதி "விராட் புருடனுக்கு இதயஸ்தானமாகிய கீழைச்சிதம்பர நடனதரிசனத்தைப் பதஞ்சலி வியாக்கிரபாதர் பொருட்டுச் சுதந்தரமாக்கினார். ஆகையால் தக்ஷண கைலாசமாய், விராட்புருடணுக்கு விந்துஸ்தானமாயுள்ள மேலைச் சிதம்பர நடன தரிசனத்தைக் காலமுனியும் காமதேனுவும் கருதியிருத்தலானும், நீயும் கோமுனியாய்த் திருப்பேரூரைச் சார்ந்திருப்பாயாயின் அங்கே வெள்ளியம்பலத்தில் திருநடனம் செய்து காட்டுவோம்" என்று விட்டுணுவுக்கு விடைகொடுத்தருளினார்.

உடனே விட்டுணு, கோமுனியாய் மவுரியுடுத்துச் சடைமுடி தரித்துத் திருநீறுங் கண்டிகையும் அணிந்து திருவைந்தெழுத்தைச் சிந்தித்துக் கொண்டு, ஆதிபுரியை அடுத்துக் காஞ்சி நதியில் விதிப்படி குளித்து, வெள்ளிமலை மீது சென்று சுவாமியையும் அம்மையையும் தரிசித்து, பின்னர் சிவபெருமான் திருக்கோயிலுக்குத் தென் திசையிலே தென் கைலாசமென்று திருநாமமிட்டு ஒராலயம் நியமித்துச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து, சக்கரதீர்த்தம் என்ற பெயரால் ஒரு தீர்த்தம் அகழ்ந்து, அத்தீர்த்தத்தைச் சிவாகம
விதிப்படி சிவபூசை செய்து காலவ முனிவரோடு சிவயோகத்திலிருந்தனர்.

வட கைலாயப் படலம்

திருமால் தவம் புரியும் போது பிரம்மதேவர் நித்திரை நீங்கி நித்திய கருமங்களை நிறைவேற்றி உலகத்தைப் படைக்கத் தொடங்கிய நேரம். வேதங்களின் முறைமையை மறந்தமையால் அத்தொழில் கைகூடப் பெற்றிலர்.

"ஐயயோ" இதற்காகவோ சிவயோகம் பயிலும்போது துயில் உண்டாகியது.

இதனால் வருந்தி மத்திய கைலாச மலையைச் சார்ந்து தேவதேவரை வணங்கி இந்த சிறியேனின் பிழையைப் பொறுத்தருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்தார்.

அதற்கு மகாதேவர், "தென் கைலாசமாகிய "திருப்பேரூரிலே" அரசமர மூலத்தின் கண்ணதாகிய வெள்ளியம்பலத்திலே நமது தாண்டவத்தை வேண்டி விட்டுணு கோமுனிவனாகிக் காலவ முனிவனோடு தவம் செய்கின்றான்.

காமதேனு வழிபட்டமையால் நமக்குப் பட்டிநாதரென்னும் நாமதேயமுமுண்டு. ஆகையால் நீ பட்டி முனியாய் அத்தலத்தே சென்று பத்தி செய்வாயாகில் நமது நடனத்தையும் கண்ணுற்று எண்ணற்ற வரம் பெறலாம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

பிரமதேவர் உடனே விடைபெற்றுத் திருவைந்தெழுத்தைச் சிந்தித்துப் பட்டிமுனியாகித் தண்டம் கமண்டலங்களைத் தாங்கி, விபூதி உருத்திராட்சகங்களைத் தரித்துக் குழைந்த உள்ளத்தோடு தவசிபுரத்தைச் சார்ந்தார்.

காஞ்சிமா நதியில் மூழ்கிச் சிவபெருமானை வணங்கிப் பன்னீர் மரத்தடியிலே குடி கொண்டருளும் மூலலிங்க மூர்த்திக்கு உத்தரதிக்கிலே தமது கமண்டலத்தைத் தீர்த்தமாக இருத்திச் சிவலிங்கப் பிரதிட்டை செய்து நீராட்டி, அருச்சித்து வெள்ளியம்பலத்தையும் தரிசித்தார்.

இவ்வாறேயாயினும் செய்து காலவ முனிவர் கோமுனிவர் இருவருடனும் மருவியிருந்தார்கள் அப்போது....

காஞ்சி நதியின் வடதிசையில் முத்தியைத் தரத்தக்க ஒரு யாகம் வளர்த்துச் சிவபெருமான் திருவுளங் களிகூறும்படி முற்றுவித்தார்.

பிரம்மதேவர் செய்த ஆலயத்திற்கு வடகயிலை என்னும் தீர்த்தத்திற்குப் பிரமதீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும், யாக குண்டம் இருக்குமிடம் திருநீற்றுமேடு என்றும் வழங்குவதாகும்.

- கோவை கு. கருப்பசாமி

படங்கள் உதவி: ச.பாலகிருஷ்ணன், கோவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com