சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்தி, யோக சிவராத்தி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது எனப் புராணங்கள் கூறுகின்றன.
மஹா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் நாம் மற்ற சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் ஒவ்வொரு வினாடியும் சிவ சிந்தனையுடன் அன்றைய தினத்தை கழிக்க வேண்டும்.
பக்தர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!!
சிவராத்திரி தினத்தில் நிறைய பக்தர்கள் அன்னதானம் செய்வதாக வேண்டிக்கொள்வார்கள். அது தவறில்லை. ஆனால், கோயிலுக்கு வரும் சிவபக்தர்கள் நான்கு ஜாமத்தின் போது கொடுக்கப்படும் பிரசாதங்களை வீண் செய்வது தான் மிகப்பெரிய தவறாகும். கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை உண்டு அதன் இலைகளைக் கோயில் முழுவதும் சிதறவிட்டு அசுத்தப்படுத்தல் கூடாது. நாம் கோயிலுக்கு சென்று புண்ணியத்தை பெற வேண்டுமே தவிர நம்மை அறியாமலும் நாம் தவறு செய்வது கூடாது.
உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தியாகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான். கூடுமானவரை உணவு எடுத்துக்கொள்ளாமல் உபவாசம் இருந்து பூஜித்தால் சிவபெருமானுக்கு அருகில் இருந்து பூஜை செய்த பலனாம். முழுநாள் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழம், பால் எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வளவு ஏன்? மஹா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு எதற்காக உணவு?
சிவராத்திரியன்று "நமசிவாய" என்ற பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் உச்சரிப்பதை விட நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய