வாரத்தின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமையும், ஆறாம் நாளான வெள்ளிக்கிழமையும் வீட்டில் நாம் என்ன செய்யலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
சிலர், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கத் தயங்குவார்கள். ஏன்? அப்படிக் கொடுத்தால் என்ன நேரும்?
ஏனெனில் செவ்வாய் முருகனுக்கும், வெள்ளி லட்சுமிக்கும் உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்குச் செல்வ வளத்தைக் கொடுப்பதுடன், அவை நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள்.
இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணம் வைத்திருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து கடன் கொடுப்பதைக் கூடுமானவரை தவிர்க்கலாம். அவ்வாறு செய்யும் போது நம்மிடம் இருக்கும் அனைத்துச் செல்வ வளங்களும் நம்மை விட்டுச் சென்று விடுவதாக ஐதீகம். அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, இந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை பூஜிக்கலாம்.
அன்றைய தினங்களில் செய்ய வேண்டியவை
• செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
• சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோ ஜலம், தாமரைப் பூக்கள் இவைகளை வீட்டில் வைத்துப் பூஜிக்கலாம்.சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
• அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே விழித்து படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்களை வளர்க்கலாம்.
அன்றைய தினங்களில் செய்யக்கூடாதவை
• குத்து விளக்கைத் தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது.
• ஈரத்துணி அணிந்தும், ஈரத்தலையுடனும் பூஜை செய்யக்கூடாது.
• வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் இவற்றில் உட்காரக்கூடாது.
• விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றைப் பிறருக்கு கொடுக்கக்கூடாது.
மேலும், அந்தத் தினங்களில் நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டுதல் கூடாது.