நாளை தை அமாவாசை. பிதுர்களுக்குத் திதி கொடுக்க வேண்டிய முக்கிய நாளாகும்.
உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை தை அமாவாசை. தட்சணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. இவை இரண்டும் முக்கியமான அமாவாசை நாள்கள். புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த அமாவாசை நாள்களில் பிதுர்கள் என அழைக்கப்படும் நமது முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜையை ஏற்று, நமது முன்னோர்கள் மகிழ்ந்து நமது துன்பங்களை நீக்கி நன்மை அளிக்கின்றனர்.
எங்கெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்....
தமிழகத்தில் பிதுர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜைத் தலங்கள் பல உண்டு. அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் இராமேஸ்வரம், முன்ஜென்மப் பாவங்கள் போக்கும் திருப்புல்லாணி, வேதாரண்யம் கோடியக்கரை, பூம்புகார், இராம - இலக்குவர்கள் பிண்டம் வைத்து வழிபட்ட திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, குடந்தை மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி, குமரிக்கடல் சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறில் உள்ள பஞ்சநதிக்கரை ஆகியவையும் அவற்றின் தீர்த்தங்களும் பிதுர்களின் ஆன்ம பூஜைக்கு உரிய தலங்களாகப் போற்றப்படுகின்றன.
தமிழகத்தைப்போல் வட இந்தியாவில் காசி, பத்ரி, கயா போன்ற இடங்களும், கேரளத்தில் உள்ள பாரதப்புழா என அழைக்கப்படும் நதி ஓரத்தில் உள்ள ஐவர் மடம் ஆகியவையும் எக்காலத்திலும் சென்று பிதுர் வழிபாடு செய்யும் வகையில் அமைந்துள்ள திருத்தலங்கள்.
அங்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் வீட்டு அருகில் உள்ள கோயிகளில் அல்லது கோயில் குளத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்.