அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென
எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை
ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில் திரு வுத்தரகோச மங்கையுள்ளாய்
திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெருமான்
பள்ளி எழுந்தருளாயே.
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்
அது = சிவபெருமானாகிய பரம்பொருள். ஆறு = வழி.
பொருள்
பரம்பொருளாகிய சிவபெருமான் பழச்சுவை போன்று இனிப்பாக இருப்பான் என்றும், அமுதம் போன்று சுவையாக இருப்பான் என்றும், அவன் நாம் அறிவதற்கு மிகவும் அரியவன் என்றும் அவன் நாம் அறிவதற்கு மிகவும் எளியவன் என்றும் தேவர்கள் உட்பட, பலரும் அவனது உண்மை நிலை அறியாமால் கூறுகின்றார்கள். தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலைகள் உடைய உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் திருவுருவம்தான் அந்த பரம்பொருளின் திருஉருவம், இவன்தான் அந்த பரம்பொருள், இவன் எங்களை ஆண்டுகொண்டுள்ளான் என்று நாங்கள் கூறுகின்றோம். திருப்பெருந்துறை தலத்தில் உறையும் மன்னவனே, நாங்கள் செய்ய வேண்டிய திருப்பணிகள் எவை எவை என்பதை எங்களுக்கு குறிப்பால் உணர்த்த நீ பள்ளி எழுந்தருள வேண்டும்