புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின்
அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே
பள்ளி எழுந்தருளாயே.
பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்
புவனி = பூமி. அவமே = வீணாக. நாம் வாழும் நிலவுலகம்தான், உயிர்கள் பெருமானை வழிபட்டுத் தங்களது வினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உகந்த இடமாக கருதப்படுகின்றது. பிரமன் வாழும் சத்திய லோகம், திருமால் வாழும் வைகுந்த லோகம் உட்பட மற்ற உலகங்களில் வாழ்வோர் தங்களது வினைத் தொகுதிகளின் பயனை அனுபவிக்க முடியுமே தவிர, தங்களது வினைகளை குறைத்துக்கொள்ள முடியாது. எனவே, தங்களது வினைகளைப் போக்கிக்கொள்ளாமல் தாங்கள் மற்றும் தங்களைச் சார்ந்தோர் வாழும் வாழ்க்கை, வீணான வாழ்க்கை என்று திருமாலும் பிரமனும் கவலைப்படுவதாக இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார்.
பொருள்
நிலவுலகத்தில் பிறக்காமல், வைகுந்தம் மற்றும் பிரம்ம லோகத்தில் வாழ்வதால், தங்களது வினைகளைப் போக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையை வீணாக கழிக்கின்றோம் என்றும் சிவன் உயிர்களை உய்வடையச் செய்யும் வழி நிலவுலகத்தில்தான் உள்ளது. எனவே, நிலவுலகத்தில் பிறப்பு எடுக்க வேண்டும் என்று திருமாலும் பிரம்மனும் ஆசைப்படுகின்றனர். இவ்வாறு பிரம்மனும் திருமாலும் ஏங்குமாறு, திருப்பெருந்துறையில் உறையும் இறைவனே, நீ உனது கருணையின் வடிவமாகிய பிராட்டியுடன் இந்த பூவுலகத்தில் புகுந்து எங்களை ஆட்கொள்ளும் வல்லமை பெற்றவனாக விளங்குகின்றாய். இறைவனே, நீ பள்ளி எழுந்தருளி எங்களை ஆட்கொள்ள வேண்டும்.