திருவெம்பாவை - பாடல் 9

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - சுந்தர் ஓதுவார்
 

விளக்கம்

நீராடுவதற்காக சென்ற பெண்கள் அனைவரும் இணைந்து தங்கள் வேண்டுகோளை பெருமானிடம் வெளியிடுவதாக அமைந்த பாடல். நல்ல பண்புகள் கொண்ட கணவன் அமைய வேண்டும் என்று வேண்டுவதுதான் பாவை நோன்பின் குறிக்கோள். அந்நாள் வரை சிவபெருமானை வணங்கி போற்றி வந்த பெண்கள், இனி வரும் நாட்களிலும் அவ்வாறே தாங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசையில், உனது அடியார்களே எங்களுக்கு கணவராக வாய்க்க வேண்டும் என்பதை இங்கே தெரிவிக்கின்றார்கள். இதே கருத்து இந்த பதிகத்தின் பதினெட்டாவது பாடலிலும் சொல்லப்படுகின்றது. பெற்றி = தன்மை. பிரான் = தலைவன். பாங்கு = உரிமை. தொழும்பு = அடிமையாக இருத்தல்.

பொருள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய பொருட்களுக்கும் பழமையாக விளங்கும் இறைவனே, வரும் காலத்தில் புதுமையாக தோன்றவிருக்கும் பொருட்களையும் கடந்து நிற்கும் தன்மை படைத்தவனே. உன்னைத் தலைவனாக ஏற்ற சிறப்பான அடியார்களாகிய நாங்கள், உனது அடியார்களின் திருப்பாதங்களைப் பணிவோம்: அத்தகைய அடியார்களையே எங்களது கணவர்களாக ஏற்று, அவர்களது உரிமைப் பொருளாக நாங்கள் திகழ்வோம். அவரது சொற்களை ஏற்று, மிகுந்த விருப்பத்துடன், அவரது கட்டளைகளை எங்களது கடமைகளாக கருதி நிறைவேற்றுவோம்; இவ்வாறான வாழ்க்கை, எங்களது இறைவனாகிய உனது கருணையால் எங்களுக்கு கிடைக்கப்பெற்றால், எந்த விதமான குறையுமின்றி நாங்கள் வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com