ஒரு சமயம் குருவும் சீடனும் பேசிக் கொண்டிருந்தபோது, சீடனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. குருவிடம் கேட்டதும் அவர் புன்னகைத்தார். சீடனின் கேள்வி உலகில் பல மதங்கள் உள்ளதே, அதில் எந்த மதம் இறைவனிடத்தில் சேர்க்கும் என்பதே.
குரு சீடனை அழைத்து இந்தக் கேள்விக்கான பதில் மறுகரையில் உள்ளது. ஒரு படகில் செல்லலாம் வா என்று கூற, சீடனும் அங்கிருந்த படகுகளில் ஒன்றைத் தயார் செய்து குருவை அழைக்கிறான். சீடனும் ஒவ்வொரு படகை எடுத்து வர அதில் ஏதேனும் குறை கூறி குரு வர மறுத்துவிடுகிறார். வெறுத்துப் போன சீடன் அவசரமாக ஒரு படகைப் பிடித்து வந்து அதில் போகலாம் என்று கூற குரு நீ சென்று திரும்பி வா என்று கூறி அவனை அனுப்பி வைக்கிறார். அவனும் மறுகரைக்குச் செல்கிறான். ஆனால் குருவிடம் கேட்ட கேள்விக்கு அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. சிறிது நேரம் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு பின் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தான். குருவிடம் சென்று வணங்கி, குருவே, எதற்கு இந்தச் சோதனை? எனக்கு ஒன்றும் வி்ளங்கவில்லையே என்றான் பணிவுடன்.
குரு மீண்டும் புன்னகைத்து, ‘உண்மையை அறிந்து கொள்ள மறுகரைக்குச் சென்றாய். அங்கு செல்ல வேண்டும் என்ற உன்னுடைய உத்வேகம் மட்டும்தான் உன் கவனத்தில் அப்போது இருந்ததே தவிர மறுகரை கொண்டு செல்லும் படகில் அல்ல. மேலும், மறுகரைக்குச் செல்வதுதான் முக்கியமானதாக இருந்ததே தவிர உன்னை சுமந்து செல்லவிருந்த படகல்ல. அது போலத்தான் இறைவனை அடைய வேண்டும் என்ற சிந்தனையும் தீவிரமும் தான் முக்கியமே தவிர ஒருவர் பின்பற்றும் மதம் முக்கியமானது அல்ல. எந்தப் படகும் அக்கரைக்கு செல்லும் எந்த மதமும் இறைவனிடம் சேர்ப்பிக்கும்’ என்றார்.
தெளிவு கிடைத்த மகிழ்ச்சியில் சீடன் குருவை வணங்கினான்.