திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு கற்பக விருட்ச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், 5-ஆம் நாளான புதன்கிழமை காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், கற்பக விருட்ச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.
சந்திரசேகரர் வீதியுலா: விழாவின் 5-ஆம் நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் விநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்: அருணாசலேஸ்வரர் கோயில் 16 கால் மண்டபம் எதிரில் இருந்து புறப்பட்டு தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வந்த சுவாமி விதியுலா, மீண்டும் அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் நிறைவடைந்தது. சுவாமி வீதியுலா வந்த வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கூடிநின்று சுவாமி தரிசனம் செய்தனர். தீபத் திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் எஸ்.ஹரிப்பிரியா மற்றும் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.