தமிழகத்தில் நிகழாண்டில் 241 கோயில்களில் ஒருகால பூஜை வைப்பு நிதித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து, அண்மையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 724 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் மேலும் 30 திருக்கோயில்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படும். திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை ஓய்வூதியதாரர்கள் பெற விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற வேண்டும் என்ற நோக்கில், ஒருகால பூஜை வைப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நிகழாண்டில் 241 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
பக்தர்களின் வசதிக்காக அனைத்து திருக்கோயில்களிலும் நவீன கழிவறை, குளியல் அறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் அதிக அளவு பக்தர்கள் வருவதால் விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், ஆணையர் மா.வீரசண்முகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.