திருத்தணியை அடுத்த நாபளூர் கிராமத்திலுள்ள காமாட்சி அம்மன் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் அஷ்டாஷ்டக (64) பைரவர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாபளூர் கிராமம், அகஸ்தீஸ்வரர் கோயிலிலுள்ள 64 பைரவர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் தனித்தனியாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான, சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக சாந்தி ஹோமம், திசா ஹோமம், அஸ்தர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தொடர்ந்து, 64 பைரவர்களுக்கும் மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
பின்னர், மூலவர் அகஸ்தீஸ்வரருக்கும், காமாட்சி அம்மனுக்கும் அபிஷேக, அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் சென்னை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாலையில் ஆன்மிகச் சொற்பொழிவும், இன்னிசை கச்சேரியும் நடந்தது.