ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு ராமானுஜர் ரத ஊர்வலம், வைணவ மாநாடு ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, நவல்பூர் எம்.எப்.சாலையில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் ராமானுஜர் ரத யாத்திரை தொடங்கியது. ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளைத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். தென்னிந்திய புரோகிதர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆ.செ.நரசிம்ம ஐயர் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை சாந்த ஆஞ்சநேயர் கோயில் ஸ்தாபகர் ரமேஷ் பிரசாத் தொடங்கி வைத்தார்.
ரத ஊர்வலம் எம்.எப்.சாலை, எம்பிடி சாலை, முத்துகடை, கிருஷ்ணகிரி டிரங்க் சாலை வழியாக நகராட்சி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.தொடர்ந்து வைணவ மாநாடு நடைபெற்றது. இதில் ஆன்மிகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு ராமானுஜர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பாரத மக்கள் கட்சி தலைவர் ஜெய்சங்கர், சாந்த ஆஞ்சநேயர் ஆலய நிர்வாகி எஸ்.மூர்த்தி, தொழிலதிபர் பி.என்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.