கிராம கோயில்கள் வளர்ச்சி பெற்றால்தான் ஆன்மிகம் முன்னேற்றம் அடையும் என்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட் சார்பில் 'அற்புத ராமானுஜர்' என்ற தலைப்பில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் கண்காட்சி மற்றும்
ராமானுஜர் குறித்த தொடர் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், பஜனை ஆகியவற்றின் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூர் ஹயக்ரீவ வித்யாஷரம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில்
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் பரமஹம்ஸ அப்பன் பரகால எம்பார் ஜீயர், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாதவ தீர்த்த பீடத்தின் மடாதிபதிகள் ஸ்ரீமத் விந்திய சாகர மாதவ தீர்த்தர், ஸ்ரீமத் விந்திய சிந்து
மாதவ தீர்த்தர் ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இதில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். கண்காட்சியைத் திறந்துவைத்து ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது: ஆன்மிகம் வளர கிராமங்களில் உள்ள கோயில்கள் வளர்ச்சி பெற வேண்டும். கிராம
கோயில்கள் வளர்ச்சி பெற்றால் தான் ஆன்மிகம் முன்னேற்றம் அடையும். கிராம கோயில்கள் வளர்ச்சி பெற சன்மானம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் பக்தி பெருகும். பக்தி தான் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்றார்.
பாஜகவுக்கு இலவச விளம்பரம்
விழாவில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'நீட்' தேர்வு தொடர்பாக இறுதி முடிவை குடியரசு தலைவர் தான் எடுக்க வேண்டும். 'நீட்' தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள
கட்சிகள் ஆதரவு தெரிவிக்காதது அவமானம். தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளித்தால் மாணவர்களின் திறமைகள் மேம்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர் ஒருவரின் தாய், தனது அடுத்த மகனையும் போர்க்களத்துக்கு அனுப்புவேன் என்று கூறியது தேச பக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
மீனவர்கள் மீது எக்காரணத்தைக் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளது இந்திய - இலங்கை நட்புறவை
பலப்படுத்தியுள்ளது. அதிமுக இரண்டாக பிளவுபட்டு இணைய உள்ளதன் பின்னணியில் பாஜக உள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது. இது பாஜகவுக்கு இலவச விளம்பரத்தை கேட்காமலே அளிப்பது போன்று
உள்ளது என்றார்.