திருமலையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஏழுமலையான் கோயிலில் சிறப்பு ஆஸ்தானம் நடைபெற்றது.
திருமலையில் செவ்வாய்க்கிழமை கோகுலாஷ்டமி உற்சவத்தை தேவஸ்தானம் சிறப்பாக கொண்டாடியது.
திருமலையில் உள்ள கோகர்பம் நீர்த் தேக்கம் பகுதியில் காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர் சிலைக்கு அர்ச்சகர்கள் பால், தேன், பழரசம், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
சுவாமிக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து பூமாலைகள் சாற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள தங்க வாசல் அருகில் ஸ்ரீகிருஷ்ணரின் உற்சவமூர்த்தியை எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
மேலும் அங்கு கிருஷ்ண ஜென்மபடலத்தை வேதவிற்பன்னர்கள் பாராயணம் செய்தனர். அதன் பின்னர் கிருஷ்ணருக்கு ஆஸ்தானம் நடைபெற்றது. இதில் திருமலை மடத்தின் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.