தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள வரகூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் நிகழாண்டு உறியடித் திருவிழா ஆக. 8-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இதில், முக்கிய வைபவமான உறியடி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியளவில் அபிஷேகம், நண்பகல் 12 மணியளவில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா, கடுங்கால் நதிக்கரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.
இரவு 7 மணியளவில் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று, நள்ளிரவு 12.30-க்கு வெள்ளி கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
பெருமாள் வீதியுலா வரும்போது, அவரைத் தொடந்து 167 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்தனர். இதையடுத்து, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் வைபவம் நடைபெற்றது. பின்னர், திருவந்திக்காப்பு, கோணங்கி, ஏகாந்த சேவை, தீபாராதனை நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை ஸ்ரீ ருக்மணி கல்யாணம் நடைபெற்றது.