விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருத்தணி பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் 25-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு திருத்தணி, கே.ஜி.கண்டிகை பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூர், நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விதவிதமான விநாயகர் சிலைகள் லாரி, வேன்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் விற்பனை சூடுபிடித்துள்ளது. திருத்தணி பெரியார் நகரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது. திருத்தணி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் இங்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
ரூ. 500 முதல் ரூ.15,000 வரை பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தணி பெரியார் நகரில் மட்டும், கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விற்பனையாளர் தெரிவித்தார்.