திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கிரிவலம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திங்கள்கிழமை கிரிவலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிரிவலம் வந்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.
கிரிவலம் வந்த உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திங்கள்கிழமை கிரிவலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலை, அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், திங்கள்கிழமை இரவு ஸ்ரீ பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை அருணாசலேஸ்வரர் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு உற்சவர் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டார்.
அவருடன் விநாயகர், பராசக்தி அம்மன், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளும் கிரிவலம் வந்தனர். 
முன்னதாக, கோயில் ராஜகோபுரம் எதிரே உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
உற்சவர் கிரிவலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 14 கி. மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்த கிரிவலத்தைக் காண வழிநெடுகிலும் பல ஆயிரம் பக்தர்கள் கூடியிருந்தனர்.
பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், கற்பூர தீபாராதனை காட்டியும் உற்சவ மூர்த்திகளை வழிபட்டனர்.
முன்னதாக, பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்த பாதையைச் சுத்தம் செய்து, கோலமிட்டு சுவாமியை வரவேற்றனர். 
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும் உற்சவர் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கிரிவலத்தை முடித்துக்கொண்டு, உற்சவ மூர்த்திகள் திங்கள்கிழமை இரவு கோயிலுக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com