திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வரும் மானிய விலை லட்டு பிரசாதத்தில் உயர்வு இல்லை என தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமலை தேவஸ்தானம் சீனிவாச கல்யாணம் உற்சவம் நடத்தும் தார்மீக நிறுவனங்களுக்கு 10 பெரிய லட்டு தலா ரூ. 100, 10 வடை தலா ரூ. 25, 200 சிறிய லட்டு தலா ரூ. 25, 1000 குட்டி லட்டு தலா ரூ. 3.50 விலையில் தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதை கல்யாண உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு தார்மீக நிறுவனங்கள் விற்று வருகின்றன.
இந்நிலையில் தேவஸ்தானம் வழங்கும் லட்டு எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பக்தர்களுக்கு லட்டு, வடை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் கூடுதல் விலையில், லட்டு மற்றும் வடை பிரசாதங்களை பக்தர்களுக்கு தேவைப்படும் அளவில் அளிக்க வேண்டும் என தார்மீக நிறுவனங்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்தன.
அதனை ஏற்று தேவஸ்தானம், பெரிய லட்டு தலா ரூ. 200, வடை தலா ரூ. 100, சிறிய லட்டு தலா ரூ. 50, குட்டி லட்டு தலா ரூ. 7 விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வழங்கும் மானிய விலை லட்டில் எவ்வித மாற்றமும் இல்லை உயர்வும் இல்லை. மேலும் தார்மீக நிறுவனங்கள் அல்லாத தனியார் நிறுவனங்களுக்கு ஏழுமலையான் பிரசாதமான லட்டு, வடை வழங்கபட மாட்டாது என அவர் தெரிவித்தார்.