திருவள்ளூர் மாவட்டம் நாபளூர் அகத்தீஸ்வரர் கோயிலில் 64 பைரவர்கள் மகா யாகம் புதன்கிழமை தொடங்கியது.
திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மழைவேண்டியும், உலக நன்மைக்காகவும் அஷ்டாஷ்டக பைரவர் (64 பைரவர்கள்) மகா யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மகா யாகம் புதன்கிழமை காலை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், 64 பைரவர்கள் மற்றும் 64 யோகிணிகள் பலி பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, வரும் 9 ஆம் தேதி அகத்தீஸ்வரருக்கும், காமாட்சி அம்மனுக்கும் நவ கலச பூஜை, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் ஹோமம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, 10 ஆம் தேதி காலை விசேஷ சாந்தி பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, கஜ பூஜை, சர்ப்ப பூஜை போன்ற பூஜைகள் நடக்கவுள்ளன. அன்றிரவு, அகத்தீஸ்வரர் - காமாட்சி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை சுவாமிநாத குருக்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.