திருமழிசை குளிர்ந்த நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் லட்ச தீபத் திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசையில் மிகவும் பழைமையான குளிர்ந்த நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 19 ஆம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, யாக சாலை பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மாலையில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற்றது.
இங்கு தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் தீரும் என்பது ஐதீகம். அதனால், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோயில் சுற்றுச் சுவர், குளக்கரைப் பகுதிகளில் வரிசையாக லட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.