மார்கழி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 2 -ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் திருவண்ணா
மலைக்கு வந்தனர். மேலும், தீபத் திருவிழா நடந்து முடிந்ததில் இருந்தே அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
மார்கழி மாதப் பிறப்பு: இந்த நிலையில், கார்த்திகை மாதம் முடிந்து சனிக்கிழமை மார்கழி மாதம் பிறந்தது.
இதையொட்டி, கோயிலில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே சனிக்கிழமை அதிகாலை வெள்ளிக்கவசம் அணிந்து ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட உற்சவ சுவாமிகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சமயநெறி ஆசிரியர் மு.சீனுவாசவரதன் திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவாற்றினார்.
கிரிவலம் வந்த பக்தர்கள்:
இதனிடையே, சனிக்கிழமை அதிகாலை முதல் நள்ளிரவு வரை திருவண்ணாமலையில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு 14 கிலோ மீட்டர் தொலைவிலான கிரிவலப் பாதையை வலம் வந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஆதிஅருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க சன்னதிகளில் வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கோயிலில் மாலை 4 மணி முதல் 8.30 மணி வரை ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.