சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி உற்சவம்
ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் மகா சிவராத்திரி உற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மலர் அலங்காரத்தில் பல்லக்கில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம், 11 நாள்கள் இக்கோயிலில் மகா சிவராத்திரி உற்சவம் நடைபெறும். இதில் தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வர். இந்த ஆண்டு சிவராத்திரி உற்சவம் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை, மாலை 4 மணிக்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், யாகசாலை பூஜைகளும், இரவு 7 மணிக்கு ஹரிக் கதைகள், அன்னமாச்சாரிய கீர்த்தனைகளும் நடைபெற்றன.
இரவு 8 மணிக்கு சுவாமி மலர் அலங்காரத்தில் பல்லக்கில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.