மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பாக புதன்கிழமை (பிப்.22) முதல் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் கே.பாண்டி தெரிவித்துள்ளது: மகாசிவராத்திரியை (பிப்.24) முன்னிட்டு, மாதேஸ்வரன் மலைக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து கொளத்தூர், பாலாறு வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேட்டூர் வழியாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாகவும், ஈரோட்டில் இருந்து பவானி, மேட்டூர் வழியாகவும் சிறப்புப் பேருந்துகள் புதன்கிழமை (பிப்.22) முதல் பிப்.27-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. மேலும், தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கென கூடுதல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.