திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி, முதல் நாள் தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அமாவாசைதோறும் திரளான பக்தர்கள் வந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை மாசி அமாவாசை, முதல் நாள் தெப்போற்சவத்தையொட்டி, சனிக்கிழமை இரவு முதலே தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் தர்ப்பணம் செய்தனர். பின்னர், கோயிலுக்கு சென்று வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மாலையில், கோயில் குளத்தில், மாசி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி, கோயில் குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் இருந்தவாறு சாமி தரிசனம் செய்தனர்.