மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருவூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 3 மணியளவில் கோயிலின் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
கோயிலின் கருவறை முதல் ஆயிரங்கால் மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கும் காய்கனிகள், பல்வேறு உணவு வகைகளைக் கொண்டு மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவூடல் நிகழ்ச்சியையொட்டி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 பேரும் ஒரு பாத நிலையில்
5 நந்திகளுக்கும், சூரிய பகவானுக்கும், தேவர்களுக்கும் காட்சியளிக்கும் ஏகபாத திருமூர்த்தி தரிசனம் நடைபெற்றது.
இதையடுத்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, கோயிலின் திட்டிவாயில் படியில் சூரிய பகவானுக்கு காட்சியளித்தனர். பின்னர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மாட வீதிகளில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து 3 முறை பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவரூபத்தினை விளக்கும் விதமாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6 மணியளவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சூரிய பகவானுக்கு காட்சியளிக்கும் ஏகபாத திருமூர்த்தி தரிசனத்திலும், மற்ற நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.