திருமலையில் பார்வேட்டை உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஏழுமலையான் திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள பார்வேட்டை மண்டபத்துக்கு உபய நாச்சியார்களுடன் சென்று வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை, பார்வேட்டை உற்சவம் என்ற பெயரில் தேவஸ்தானம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, பார்வேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், ஏழுமலையான் சார்பில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கையில் வேல் ஏந்தி, வேட்டையாடினர். இந்நிகழ்ச்சியைக் காண, ஏராளமான பக்தர்கள் பார்வேட்டை மண்டபத்தில் திரண்டனர். இதையொட்டி, மலர்கள் மற்றும் பழங்களால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டது.