பேரம்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பார் வேட்டை திருவிழாவில், சுற்றுவட்டார 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில், பேருந்து நிலையம் அருகே உள்ள கூவம் ஆற்றங்கரையோரம் பார் வேட்டை திருவிழா நடைபெற்றது. இதில், பேரம்பாக்கத்தில் இருந்து பாலமுருகன், காசி விஸ்வநாதர், சோளீஸ்வரர் மற்றும் களம்பாக்கத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரத்தில் இருந்து வேங்கட பெருமாள் ஆகிய உற்சவர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினர்.
மேலும், சிவபுரம் கிராமத்தில் இருந்து குறுந்த விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து வள்ளலார், மாரியம்மன் என மொத்தம், 9 உற்சவர்கள் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒன்று கூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனை பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கடம்பத்தூர், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உள்பட சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.