திருமலைக்கு மேல் விமானங்கள் பறப்பதை தவிர்க்க இயலாது என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளைச் செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர் திங்கள்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் திருவுருவப் படம், தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருமலை கோயிலுக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அது முடியாத செயல். திருப்பதி விமான நிலையத்திலிருந்து மேலே எழும்பும் விமானங்கள் அனைத்தும் திருமலைக்கு மேல் பறந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏழுமலையான் கோயிலின் மேல் விமானங்கள் பறந்து செல்வதை வேண்டுமானால் தடுக்க முடியுமே தவிர, திருமலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது. இதனைப் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.