பழனி தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 3-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடிக்கட்டி மண்டபத்தில் அன்று காலை 9.30 மணிக்கு மேல் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி தினமும் தங்கமயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக் கிடா, வெள்ளிக் காமதேனு, தந்த சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 4 ரத வீதிகளில் உலா வருகிறார்.
பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து வெள்ளித்தேர் புறப்பாடும் நடைபெறுகிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தைப்பூசத் தேர் உலா நடக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், திருக்கொடி இறக்கமும் நடைபெறும்.
விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகையையொட்டி கோயில் சார்பில் பல இடங்களில் பக்தர்கள் இளைப்பாறும் இடம், குடிநீர் வசதி, தாற்காலிக பேருந்து நிலையம், சுகாதார மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.