திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூரில் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள நூறு கால் மண்டபம் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.
திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சாமி கோயில். 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கோயிலில் நூறு கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் கோயில் திருவிழாக்கள், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த நூறுகால் மண்டபம் கடந்த 50 ஆண்டுகளாக சிதிலமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைச் சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள், 300 ஆண்டுகள் பழைமையான இந்த நூறு கால் மண்டபத்தை காணச் செல்கின்றனர்.
அந்த மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும், அங்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, இந்து சமய அறநிலையத் துறையினர், சிதிலமடைந்துள்ள நூறு கால் மண்டபத்தை நேரில் ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.