அரக்கோணம் அருகே அரும்பாக்கத்தில் உள்ள அனுபாம்பாள் உடனுறை தேவாதீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், சென்னை உயர் நீதிமன்ற ஏழு நீதிபதிகள் பங்கேற்றனர்.
அரும்பாக்கத்தில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அனுபாம்பாள் உடனுறை தேவாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 8.15 மணிக்கு கோயிலின் மூலவர் சந்நிதி, அம்பாள் சந்நிதி, ராஜகோபுரங்கள், கொடிமரம் ஆகியவற்றுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ரமேஷ், டி.என்.வள்ளிநாயகம், கே.வெங்கட்ராமன், கே.கல்யாணசுந்தரம், ஆர்.மகாதேவன், எம்.வி.முரளீதரன், எஸ்.பாஸ்கரன், ஆர்.எம்.டி.டீக்காராமன் மற்றும் திருவேற்காடு ஐயப்ப சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளைய சந்நிதானம் மருதாசல அடிகளார், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், வேலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராஜேந்திரன், அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.