காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சாமி கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி கடந்த 3-ஆம் தேதி முதல் ஸ்ரீசெல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், ஸ்ரீசேனை முதன்மையார் புறப்பாடு, ஆழ்வார் திருநாள், சிறுபுண்ணியகோடி விமானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து தங்கச் சப்பரம், சிம்ம வாகனம், இரண்டாம் காப்பு, ஹம்ச வாகனம், சூரிய பிரபை சேவை ஆகியன நடைபெறுகின்றன.
வரும் 8-ஆம் தேதி காலை கருட சேவை கோபுர தரிசனமும், மாலையில் ஹனுமந்த வாகன வீதி உலாவும் நடைபெறும். பின்னர், சேஷ வாகனம், சந்திரபிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம் சேவை நடைபெறுகின்றன.
ஜூன் 12-ஆம் தேதி திருத்தேர் வீதி உலா நடைபெறவுள்ளது. அதன் பின்னர், தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆல்மேல் பல்லக்கு, புண்ணியக்கோடி விமானம், வெட்டிவேர் சப்பரம், தீர்த்தவாரி ஆகிய நிகழ்வுகளுடன் ஜூன் 15-ஆம் தேதி அன்று பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.